வெள்ளி, ஜனவரி 18, 2013

சுனில் ஜோஷியை கொன்றவர்கள் லோகேஷ் சர்மா, ராஜேந்திர சவுத்ரி – என்.ஐ.ஏ!

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை மலேகான் – சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் லோகேஷ் சர்மாவும், ராஜேந்திர சவுத்ரியும் கொலை செய்துள்ளனர் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் மத்தியபிரதேச மாநிலம்
இந்தூரில் இருந்து கைதான பல்பீர் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. சுனில் ஜோஷி கொலைக்கான சதித்திட்டத்தில் பல்பீருக்கும் பங்குண்டு என்று என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.
மலேகானில் 2006-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பிலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் சூத்திரதாரியாக செயல்பட்டவன் சுனில் ஜோஷி. இவன் ஹிந்துத்துவா தீவிரவாத குழுவில் பெண் தீவிரவாதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபொழுது கொலைச் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ கூறுகிறது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும், டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானி கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புடைய லோகேஷ் சர்மாவுக்கு பல்பீர் நெருங்கிய கூட்டாளி ஆவான். இவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை என்.ஐ.ஏ ஃபாரன்சிக் சோதனைக்கு அனுப்பியுள்ளது.
2007 டிசம்பர் 29-ஆம் தேதி சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்டான். ஆனால், இவ்வழக்கில் தொடர்புடைய லோகேஷ் சர்மா இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜோஷி கொலையைக் குறித்து முதலில் விசாரணை நடத்திய மத்தியபிரதேச மாநில போலீஸ் 5 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக