வியாழன், டிசம்பர் 15, 2011

பாகிஸ்தானுடன் இருப்பது கூடா நட்பாம்- ஹிலாரி

Hillary Clintonவாஷிங்டன்: அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே உள்ள உறவில் விரிசல் அதிகரித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உடனானது கூடா நட்பு என்றும் அவர் வர்ணித்துள்ளார். அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர்
செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நிதி உதவியை நிறுத்த முடிவு

பாகிஸ்தான் பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் செய்யவேண்டும். குறிப்பாக விவசாயத்துறை, எரிசக்தித்துறைகளில் திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே போட்டி நிறைந்த சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சியடைய முடியும். மேலும் பாகிஸ்தானில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒரு சிலர் மட்டுமே வருமான வரி செலுத்த முன் வருகின்றனர். ஏராளமானோர் வரிஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இது பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. எனவேதான் பாகிஸ்தானிற்கு நிதியுதவி செய்வதைக் காட்டிலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.

கூடா நட்புதான்

அமெரிக்க- பாகிஸ்தான் நாடுகளிடையே தற்போது ஸ்திரத்தன்மையற்ற நிலை இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தான் உடனான நட்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை, இதை நாங்கள் எக்காலத்திலும் மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானுடனான நட்பு கூடா நட்புதான் என்றும் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக