செவ்வாய், மார்ச் 27, 2012

அமெரிக்காவிடம் அளவுக்கதிகமான அணு ஆயுதங்கள் : அதிபர் ஒபாமா ஒப்புதல்


சியோல் :எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே அணு ஆயுதங்கள் உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தென்கொரிய தலைநகர் சியோலில், அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாடு துவங்குவதற்கு முன்னதாக அதிபர் ஒபாமா கூறியதாவது: எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே அணு ஆயுதங்கள் உள்ளன. 1,500 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அணுகுண்டு பொருத்தப்பட்ட 5 ஆயிரம் ஏவுகணைகள் உள்ளன. எனவே, தான், அணு ஆயுதங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இந்த விஷயத்தில், ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட உள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இது தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன் அளித்து வருகின்றன.அணு ஆயுதம் தயாரிப்பதற்குரிய பொருட்கள் தேவையான அளவில் கிடைக்கின்றன. இவை பாதுகாப்பற்ற நிலையில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பெற்று அணுகுண்டு தயாரிக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனர். அணு குண்டுகள், பயங்கரவாதிகளின் கையில் சிக்கி விடுமோ என்ற அச்சுறுத்தல் தான், உலகத்தை ஆட்டிப் படைக்கிறது.மேலும், அணுஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள் பாதுகாப்பற்ற முறையில் சில இடங்களில் உள்ளன என்பதும் எங்களுக்கு தெரியும்.எனினும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எந்த வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் தன்மை படைத்திருப்பதால், அணு ஆயுதங்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்த எண்ணத்தில் இங்கே 53 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் அணு ஆயுதக் குறைப்பு பற்றி வலியுறுத்தப்படும்.இவ்வாறு ஒபாமா கூறினார்.

கட்டி தழுவினார் ஒபாமா : இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கை, ஒபாமா கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

கிலானி மறுப்பு:சியோல் மாநாட்டில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி குறிப்பிடுகையில், " வடகொரியாவின் அணு சக்தி திட்டத்திற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த காலங்களில் இது போன்ற தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது முடிந்து போன விவகாரம். அணுசக்தி பொருட்களால் ஏற்படும் பேரழிவைத் தடுப்பதற்குரிய உபாயங்களை உலகம் கண்டறிய வேண்டும்' என்றார்.

வடகொரியாவுக்கு எச்சரிக்கை:வடகொரியா பல்வேறு நவீன ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் அணுகுண்டை சுமந்து செல்ல வல்ல ராக்கெட்டை சோதனை செய்து வருகிறது. இந்த ராக்கெட் சோதனை தென்கொரியாவின் எல்லைப்புற ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கக்கூடாது. மீறினால் அந்த ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம் என, தென் கொரிய ராணுவ அதிகாரி யூன் வோன் ஷிக் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக