வெள்ளி, மார்ச் 30, 2012

12 ஆண்டு துயர வாழ்க்கையின் இறுதியில் ஃபக்ரா உயிரை மாய்த்தார்!

 ரோம்:முன்னாள் கணவர் ஆசிட் வீசியதன் மூலமாக முகம் கோரமாகி 12 ஆண்டுகள் துயரத்தில் வாழ்க்கையை கழித்து வந்த முன்னாள் பாக்.நடன மங்கை ஃபக்ரா யூனுஸ் தற்கொலைச் செய்துள்ளார். இத்தாலியில் அவர் வசித்து வந்த ஃப்ளாட்டின் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துள்ளார். பாகிஸ்தானில் சட்டம் கடைப்பிடித்த குற்றகரமான மவுனம் தன்னை தற்கொலைக்கு நிர்பந்தித்ததாக ஃபக்ரா தற்கொலைச் செய்யும் முன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டியின் மூத்த தலைவர் குலாம் முஸ்தஃபா கர்ரின் மகனான பிலால் கர் என்பவர்தாம் ஃபக்ராவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார். 2000-ஆம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நிகழ்ந்தது. பிலால் கர் ஃபக்ராவின் முன்னாள் கணவர் ஆவார். தனது தாயாரின் வீட்டில் ஃபக்ராவின் கணவர் யூனுஸ் அவரது ஐந்து வயது மகன் ஆகியோர் முன்னிலையில் வைத்து அவர் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆசிட் ஊற்றப்பட்டது.
ஆசிட் தாக்குதலில் முகம் முற்றிலும் கோரமான ஃபக்ராவுக்கு 39 மாறுபட்ட அறுவை சிகிட்சைகள் நடத்தப்பட்டன. உயர் சிகிட்சைக்காக அவர் இத்தாலி சென்றார். மூன்று ஆண்டுகள் நீண்ட சட்டப்போராட்டத்தின் இறுதியில் 2003 ஆம் ஆண்டு பிலால் கர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ஃபக்ரா நீதியின் மீதான நம்பிக்கையை இழந்தார்.
அதேவேளையில், தனது பெயரைக் கொண்ட இன்னொரு நபர் இத்தாக்குதலை நடத்தியதாகவும், தான் குற்றமற்றவன் என்பது நீதிமன்றத்திற்கு தெரியவந்ததால் விடுவித்ததாகவும் பிலால் கர் கூறுகிறார். ஃபக்ராவின் உடல் கராச்சிக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக