வியாழன், பிப்ரவரி 14, 2013

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு செலவு எவ்வளவு?- மத்திய- மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் !


ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிங்வி, கோகலே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகாரம் என்ற பெயரில் முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி, ஆட்சியாளர்களால் சாதாரண மக்களின் வரிப்பணத்தை மத்திய மாநில அரசுகள் வீணடிக்கிறது என்று நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.
 
அரசியல் தலைவர்கள், மிகவும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக இதுவரை செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பதை மத்திய, மாநில அரசுகள் 4 வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
மேலும் இந்தியாவில் எத்தனை பேருக்கு அரசு பாதுகாப்பு வழங்கப்படுகிறது, என்ன பாதுகாப்பு வழங்கப்படுகிறது, அவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் அதற்காக செலவிடப்படும் தொகை தொடர்பான விவரங்களை மார்ச் 14-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
 
அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் விரிவான பாதுகாப்பு அளிக்க தேவையில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்துறை மந்திரியாக இருந்தபோது ப.சிதம்பரம் தனது பாதுகாப்பை ஏற்க மறுத்ததையும், பாதுகாப்பு மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசும் பாதுகாப்பை பயன்படுத்தவில்லை என்பதையும் தெரிவித்தனர்.
 
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வசதிக்காக எந்த விதிகளின்படி போலீசார் சாலைகளில் போக்குவரத்தை தடை செய்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.        3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக