வியாழன், பிப்ரவரி 21, 2013

பொது வேலை நிறுத்தம்: வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

தொழிற்சங்கங்களின் 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக மத்திய அரசு  அலுவலகங்களில் பணிகள் மற்றும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டன. வட  மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. ஏ.ஐ.டி.யு.சி.,  சி.ஐ.டி.யு.தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். உள்ளிட்ட 11  தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை  முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை  வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. வங்கி மற்றும் காப்பீட்டு ஊழியர் சங்கங்கள்,  மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு சம்மேளனங்கள் போராட்டத்திற்கு  ஆதரவு அளித்துள்ளது.

இன்று நடந்த முதல் நாள் முழு அடைப்பு போராட்டத்தினால் மேற்குவங்கம், குஜராத்,  அரியானா, உ.பி.பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில்  பஸ்கள், ஆட்டோக்கள்  ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு  வாழ்‌க்கை பாதிக்கப்பட்டது.

அரியானா மாநிலத்தில் அம்லாவில் நடந்த ஸ்டிரைக்கின் போது , தொழிற்சங்கத்தைச்  சேர்ந்த ஒருவர் அரசு பஸ்சை இயக்க முயன்றார். அவரை சக ஊழியர்கள் தடுத்தனர்.  இதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டார்.

உ.பி.மாநிலம் நொய்டாவில் வன்முறை வெடித்து. இதில் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி  ஒன்றில் புகுந்த மர்‌மக்கும்பல், கார்கள் உள்ளிட்டவைகளை தீவைத்து  கொளுத்தினர்.டெல்லியில் பஸ், ஆட்டோக்கள் ஓடாததால், முக்கிய ரயில்  நிலையங்களில் வந்திறங்கிய பயணிகள் தங்களது ஊருக்கு செல்லமுடியாமல்  அவதிப்பட்டனர். 

தென்மாநிலங்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஸ்டிரைக்கிற்கு ஆதரவு இருந்தது.  இங்கும் அத்யாவசிய தேவைகளால் மக்கள் அவதியுற்றனர்.

தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை :

அதே சமயம் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.பஸ்,ரயில் சேவைகள்  வழக்கம்போல் காணப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டன. 

அதே சமயம் வேலை நிறுத்தத்தில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட்டதால் சென்னையில்  உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வங்கி அதிகாரிகள்,  ஊழியர்கள் முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றதால் வங்கி சேவை முற்றிலும்  பாதிக்கப்பட்டன.

தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் மூடி இருந்ததால் வாடிக்கையாளர்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். காசோலை பரிவர்த்தனை, பணப்பட்டு வாடா,  டொபாசிட் செய்தல், பணப்பரிமாற்றம் போன்றவை அடியோடு பாதித்தன. ஒரு சில  தனியார் வங்கிகளும், ஏ.டி.எம். மையங்கள் மட்டும் செயல்பட்டன.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக