வியாழன், பிப்ரவரி 21, 2013

பிப்ரவரி 22 இல் ரெயில் மறியல் : எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு !


ரெயில்வே துறையால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதை கண்டித்து வரும் 22 ம் தேதி சென்னையில் இரயில் மறியல் போராட்டம் நடைபெரும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


இச்சந்திப்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

மாவட்ட மாநாடுகள் மற்றும் மாநில ,தேசிய நிர்வாகிகள் தேர்தல்:

எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)கட்சியின்  வருகிற 2 வருடங்களுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல், கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வருகிறது.இந்த மாதம் இறுதிக்குள் முழுமையாக நடந்து முடிந்து  விடும் .தொடர்ந்து அடுத்த மாதம் 9,10  ஆகிய தேதிகளில் திருச்சியில் கட்சியின் மாநில பொது குழு நடைபெற உள்ளது .அதில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்பட உள்ளனர்.தொடர்ந்து மார்ச் 30 இல் கட்சியின் தேசிய பொது குழு கோவையில் நடைபெற உள்ளது.இதில் கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில்எஸ்.டி.பி.ஐ கட்சி மிக வேகமாக, வீரியமாக வளர்ந்து  வருகிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த பல்வேறு தரப்பினரும், பலவேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எஸ்.டி.பி.ஐ   கட்சியில் ஆர்வத்துடன் இணைத்து வருகின்றனர். கட்சியின் வளர்ச்சியினுடைய   ஒரு பகுதியாக வரும் நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.நெல்லையிலும், மதுரையிலும் மாநாடு நடந்து முடிந்துள்ளது. இராமநாதபுரத்தில் வருகிற 23 ஆம் தேதியும் , திருச்சியில் அடுத்த மாதம் 10ம் தேதியும் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு வரும்  மார்ச் 31ம் தேதி வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்த பல்லாயிரக்கணக்கான  மக்கள் திரளாக இதில் கலந்து கொள்ள உள்ளனர் .பூரண மதுவிலக்கை அமல்படுத்து, தமிழக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு   7 சதவீதமாக உயர்த்திடு, சிறு குறு தொழில்களை பாதுகாத்திடு,7 வருடம் சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்திடு, லஞ்சம் ஊழல்களுக்கு எதிராக அணிதிரள்வோம் ஆகிய முழக்கங்களை முன்வைத்து இந்த மாநாடு நடைபெற உள்ளது .அனைத்து தரப்பினரும் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அப்சல் குரு பிரச்னையை  திசை திருப்பவே நான்கு தமிழர்களின் கருணை மனு நிராகரிப்பு:

அப்சல் குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையும், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட விதமும் அநியாயமானது.பாரதிய ஜனதாவை எதிர் கொள்ளவே இந்த தண்டனை நிறைவேற்றம் நடைபெற்று உள்ளது . இதனால் ஏற்பட்டுள்ள விவாதங்களை மறைக்கவே நான்கு தமிழர்களின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அரசியல் காரணங்களுக்காகவே இந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தூக்குத் தண்டனையை அரசியலுக்காக பயன்படுத்துகிறது.

26 ல் சேலம் விவசாயிகளின்   போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்பு:

கொச்சி முதல் பெங்களூர் வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக விவசாயிகளின்  ஒப்புதல் இல்லாமலேயே அவர்களின் நிலங்கள் கைவசப்படுத்துவதாகவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் பதிக்கப்படும் குழாய்களுக்கான பாதுகாப்பை நில உரிமையாளர்கள் மீது சுமத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. விவசாயிகளை அச்சுறுத்துவதையும் உரிய நிவாரணம் இன்றி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.எனவே விவசாயிகளின் நலனுக்காக நடைபெறும் போராட்டத்தை  எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது.வரும் 26 ம் தேதி சேலத்தில் நடைபெறும் கெயில் நிறுவன முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்கிறது.

ரயில்வே துறை தமிழகத்தை புறக்கணிப்பதை கண்டித்து பிப்ரவரி -22 இல் இரயில் மறியல்:

தொடர்ந்து இரயில்வே துறை தமிழகத்தை புறக்கணித்து வருகிறது . தமிழக திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை .இதை கண்டித்தும் ,வரும்  இரயில்வே  பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய இரயில்களுக்கான அறிவிப்பையும் , அதிக நிதி ஒதுக்கீட்டையும் தமிழகத்திற்கு அளிக்க வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வரும் 22 ம் தேதி சென்னையில் எனது தலைமையிலும் , நெல்லையில் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் தலைமையிலும் இரயில் மறியல் போராட்டம் நடைபெரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது  மாநிலத் துணை தலைவர் பிலால் ஹாஜியார் ,மாநில செயலாளர் V.M அபுதாகிர்,மாநில செயற்குழு உறுப்பினர் நிஜாம் முகைதீன் ,கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா,துணைத்தலைவர் அன்சர்,பொதுச்செயலாளர் அப்துல் காதர்,SDTU மாநில செயலாளர் அப்துல் கரீம், SDTU  மாவட்ட தலைவர் அஸ்ரப் ஆகியோர் உடன் இருந்தனர் .

1

தகவல்:

B.S.I.கனி
மாநில பொருப்பாளர்
செய்தி ஊடகத்துறை
எஸ்.டி.பி.ஐ கட்சி-தமிழ்நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக