செவ்வாய், ஜூலை 08, 2014

தாருல் கழாவையும், தாருல் இஃப்தாவையும் தடைச் செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்

முஸ்லிம்களுக்கு இடையேயான தர்க்கங்களை தீர்த்துவைக்கும் நிறுவனங்களான தாருல் கழா மற்றும் ஃபத்வாக்களை வெளியிடும் தாருல் இஃப்தாவையும் தடைச் செய்யக்கோரி தாக்கல்ச் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது.

தாருல் கழா என்பது நீதித்துறைக்கு இணையானதாக செயல்படுகிறது என்ற வாதத்தை நீதிபதிகளான சி.கே.பிரசாத், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு வெளியிட்ட 18 பக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.தாருல் கழா என்பது ஜனநாயக கட்டமைப்பிற்கு சவால் விடும் இணையான நீதிமன்றம் அல்ல என்றும், அதிகாரப்பூர்வமற்ற தர்க்கங்களுக்கு தீர்வு அளிப்பது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் வாதத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து தீர்ப்பளித்தது.தாருல் இஃப்தா மத நிறுவனம் என்றும், அவை வெளியிடும் ஃபத்வாக்களுக்கு(தீர்ப்புகளுக்கு) சட்ட அந்தஸ்து கிடையாது என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது.
விஸ்வ லோசன் மாதன் என்ற வழக்கறிஞர், பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், முஸ்லிம் சமுதாயத்தினரின் “ஷரீய” நீதிமன்றங்கள், நாட்டின் நீதித்துறைக்கு இணையானவையான செயல்படுவதாகவும், அவை பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு தமது தீர்ப்பில் கூறியிருப்பது:
தாருல் கழாவும், தாருல் இஃப்தாவும் சட்டப்படி உருவாக்கப்பட்டது அல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.ஃபத்வாக்களை கடைப்பிடிக்க யாருக்கும் சட்டரீதியான கடமை கிடையாது .ஃபத்வாக்களை பலம் பிரயோகித்து நடைமுறைப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை.ஃபத்வாக்களை நிராகரிக்கவோ,ஏற்கவோ, அரசியல் சாசன அடிப்படையிலான நீதிமன்றங்களையோ அணுகலாம். அதேவேளையில் ஃபத்வாக்களுக்கு மதரீதியான அடித்தளம் இருப்பதால் மனோதத்துவரீதியாக செல்வாக்கு உண்டு.ஆகையால் பொறுப்புணர்வு இல்லாத ஃபத்வாக்களை அறிஞர்கள் வெளியிடக்கூடாது. இரண்டு கட்சி தாரர்களுக்கு சம்மதம் என்றால் தர்க்கத்தை தீர்க்க இவற்றை அணுகலாம்.ஆனால், தாருல் கழாவுக்கோ, தாருல் இஃப்தாவுக்கோ அவை அளிக்கு தீர்ப்பிற்கு சட்ட பின்புலம் கிடையாது.அவற்றை பின்பற்றாமலும் இருக்கலாம்.மூன்றாவது கட்சிதாரர் மீது ஃபத்வாவை பிரயோகிக்க முடியாது. நிரபராதிகளை தண்டிக்க ஃபத்வாவை உபயோகிக்கக் கூடாது.ஒருவருடைய அடிப்படை உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்துமானால் ஃபத்வா சட்டவிரோதமாகும் என்று தெரிவித்தது.
முஸ்லிம்களுக்கிடையேயான திருமண, குடும்ப, சொத்து சச்சரவுகளை தீர்ப்பதற்கான அமைப்புதான் தாருல் கழா என்றும், நீதிமன்றங்களைப் போல தீர்ப்பை நடைமுறைப்படுத்தவோ, பிரயோகிக்கவோ கட்டமைப்புகள் எதுவும் இதற்கு கிடையாது என்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
ஒரு விவகாரம் தொடர்பாக எதிர் கட்சிதாரருக்கு நோட்டீஸ் அனுப்பும் தாருல் கழா, அந்த நோட்டீஸிற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றால் பின்னர் அவ்விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.இவ்வாதத்தை அங்கீகரித்த நீதிமன்றம், இரண்டு முஸ்லிம்கள் நீதிமன்றத்திற்கு வெளியே மத்தியஸ்தம் செய்ய தயாரானால் யாரும் தலையிடமுடியாது என்று தெரிவித்தது.ஃபத்வாக்கள் உபதேசம் மட்டுமே என்றும் முஸ்லிம்கள் கூட அதனை அங்கீகரிக்கும் கடமை இல்லை என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.இந்த தனிப்பட்ட அமைப்புகள் குற்றவியல் வழக்குகளை கையாளுவது கிடையாது.அதற்கு பதிலாக சிவில் வழக்குகளில் மத்தியஸ்தம் வகித்து வழக்குகளில் சமரசம் ஏற்படுத்துபவை என்று மத்திய அரசு வாதிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக