வெள்ளி, ஜூலை 25, 2014

அல்ஜீரிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் வடக்கு மாலியில் கிடைத்துள்ளது: மாலி அதிபர் தகவல்

நேற்று பிற்பகல் ஏர் அல்ஜீரியாவின் ஏ.எச்.5017 என்ற விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.
இந்த விமானம் கிளம்பிய 50 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது. இதை அடுத்து அவசரகால நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். விமானம் மாலியில் விழுந்திருக்கலாம் என்று அச்சம் எழுந்ததால் அங்கு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் தங்கள் நாட்டில் கிடைத்திருப்பதாக மாலி அதிபர் இப்ராகிம் பவ்பாகர கீத்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்நாட்டின் வடக்கில் உள்ள பாலைவன பிரதேசமான அகுவெல்ஹாக் மற்றும் கிடல் ஆகிய பகுதிகளுக்கிடையே விமானத்தின் சிதைந்த பாகங்கள் விழுந்து கிடப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார். இந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பிரெஞ்சு நாட்டு பயணிகள் பயணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக