திங்கள், ஜூலை 23, 2012

இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது புத்திசாலி ஜனாதிபதி... உலக மீடியாக்கள் புகழாரம் !

வாஷிங்டன்: இந்திய குடியரசுத் தலைவராக புத்திக்கூர்மை படைத்த பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று உலக மீடியாக்கள் பிரணாப் முகர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளன. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் குறித்து நம்மூர் மீடியாக்களைப் போலவே உலக மீடியாக்களும் ஆவலுடன் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் கூறுகையில், மிகவும்
புத்திசாலித்தனமும், புத்தி கூர்மையும் படைத்தவர் 76 வயதான பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கியத் தலைவராக திகழ்ந்தவர் பிரணாப் முகர்ஜி. பல ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியை பிரிந்து போய் விடாமல் கட்டிக் காத்த முக்கியஸ்தராக திகழ்ந்தார் பிரணாப் என்று கூறியுள்ளது.
பிபிசி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் தொண்டுக் கிழவனார் பிரணாப் முகர்ஜி. பல்வேறு கூட்டணிகளை சிறப்பாக அமைக்க உதவியவர். 2014 லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. அப்போது குடியரசுத் தலைவரின் பங்கு மிக முக்கியமானதாக அமையும் என்பதால் பிரணாபின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படவுள்ளன என்று கூறியுள்ளது.
மேலும் பிரணாபின் வெற்றி காங்கிரஸுக்குத்தான் பெரும் பலமாக அமைந்துள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
பாங்காக் போஸ்ட் கூறுகையில், குழப்பம் மிகுந்த இந்திய அரசியலில் பிரணாப் முகர்ஜியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும். அதற்கு அவரது நீண்ட கால அரசியல் அனுபவம் உதவி புரியும் என்று கூறியுள்ளது.
தி ஆஸ்திரேலியன் கூறுகையில், பொருளாதார ஏற்றத்தாழ்வு, நாடாளுமன்றத்தில் தொடரும் குழப்பங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், பிரணாப் முகர்ஜி, சற்று சிறப்பாக செயல்ப முனைவார் என்று கூறியுள்ளது. மேலும் ஒரு படி போய், நாடாளுமன்றத்தில் ஸ்தம்பிப்பு நிலை வரும்போது குடியரசுத் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மல்லுக்கட்டும் கட்சிகளை அழைத்து அவர் பேசக் கூடும் என்றும் தி ஆஸ்திரேலியன் கூறியுள்ளது.
இவ்வாறாக உலக மீடியாக்கள் பிரணாப் முகர்ஜி குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கை குண்டக்க மண்டக்க விமர்சித்த டைம் இதுவரை பிரணாப் குறித்து பெரிதாக கருத்து தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக