செவ்வாய், அக்டோபர் 30, 2012

நிதின் கட்காரி ஊழல்: விசாரணை தொடங்கியது !

டெல்லி:பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டிலுள்ள பி.பி.எஸ்.எல். என்ற “பூர்த்தி பவர் அண்ட் சுகர் லிமிட்டட்”  (Purti Power & Sugar Limited – PPSL) என்ற நிறுவனத்திற்கெதிராக கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகமும், வருமான வரித்துறையும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காண்பதாகவும், இந்த நிறுவனத்தின் முதலீடுகள் குறித்து பரிசோதிக்கப்படும் என்றும் கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி நிறுவன அறிக்கை கூறுகிறது. “பூர்த்தி பவர் அண்ட் சுகர் லிமிட்டட்” நிறுவனத்தின் பொருளாதார முதலீடுகள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. பூர்த்தி குழுமத்தின் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள்
ஆகியோரின் முகவரிகளில் பெரும்பாலானவை போலியானவை என்றும், பங்குதாரர்களில் பெரும்பாலானோர் கட்காரியின் நண்பர்களும், ஆதரவாளர்களுமாகவே இருக்கின்றனர் என்றும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கட்காரியின் நிறுவனத்திற்கு பணம் முதலீடு செய்தது ஐ.ஆர்.பி. என்ற ஐடியல் ரோட் பில்டர்ஸ் (Ideal Road Builders) என்ற நிறுவனம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கட்காரி மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுத்துறை அமைச்சராக இருந்த 1995ம் வருட காலகட்டத்தில் ஐ.ஆர்.பி.க்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தப் பணிகள் கிடைத்திருந்தன. அச்சமயத்தில் 164 கோடி ரூபாய் பணத்தை ஐ.ஆர்.பி. கட்காரியின் சொந்த நிறுவனமான பி.பி.எஸ்.எல்.லுக்குக் கடனாக வழங்கியது.
கட்காரிக்கெதிராக உயர்ந்துள்ள முதலீடு குறித்த புகார்கள் நிறுவனங்களின் பதிவாளர் (Registrar of Companies) மூலமாக விசாரிக்கப்படும் என்று மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
மும்பையிலும், நாக்பூரிலும் கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்தின் முக்கிய விசாரணையை நிறுவனங்களின் பதிவாளர் நடத்துகிறார். ஏனெனில் பூர்த்தி குழுமத்தின் நிறுவனங்கள் பதிவு செய்திருப்பது இந்த இரண்டு நகரங்களிலும்தான்.
இந்த நிறுவனத்தின் முதலீடுகளில் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக அறியப்பட்டால் இது குறித்த விசாரணை சிறப்பு மோசடிப் பிரிவின் (Special Fraud Unit) கீழ் மாற்றப்படும். இதற்கிடையில் பி.பி.எஸ்.எல்.லுக்கெதிரான புகார்கள் குறித்த விசாரணையை வருமான வரித் துறையும் ஆரம்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக