செவ்வாய், அக்டோபர் 02, 2012

சஞ்சீவ்பட்:மோடி அரசின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து !

அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த காரணத்தால் பழிவாங்கும் விதமாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மோடி அரசின் உத்தரவை ரத்துச் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசு நேற்று (திங்கள்கிழமை) சஸ்பெண்ட்
உத்தரவை ரத்து செய்தது. 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து  அவசரமாக கூட்டிய கூட்டத்தில் ஹிந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது கோபத்தை வெளியிட அனுமதிக்கவேண்டும் என்று மோடி உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்  செய்தார்.
இதனைத் தொடர்ந்து மோடி அரசு, சஞ்சீவ் பட்டை பழிவாங்கும்விதமாக துறைசார்ந்த விசாரணைக்கு உள்படாதது, அனுமதியின்றி விடுமுறையில் சென்றது, காவலர் பயிற்சிப் பள்ளித் தலைவராக இருந்தபோது அலுவலக வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது போன்ற காரணங்களைக் கூறி சஞ்சீவ் பட்டை சஸ்பெண்ட் செய்தது.
இவற்றுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், மத்திய உள் துறையின் மறு ஆய்வுக் குழு இவரது சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்தது. அப்போது இவரது சஸ்பெண்டை நீட்டிக்கத் தேவையில்லை என அக்குழு முடிவெடுத்தது.
இது குஜராத் மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. மத்திய உள் துறையின் இந்தப் பரிந்துரையை ஏற்பதாக குஜராத் மாநில உள் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.நந்தா நேற்று(திங்கள்கிழமை) தெரிவித்தார்.
ஆயினும், மேலும் இரு குற்றச்சாட்டுகளுக்காக சஞ்சீவ் பட் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் அவர் உடனடியாகப் பணிக்குத் திரும்ப முடியாத சூழல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக