திங்கள், ஏப்ரல் 30, 2012

கேரளா:காவியாகும் கம்யூனிசத்தின் செங்கொடி!

கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் அமைப்பின் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்யூனிச வெறியர்களால் படுகொலைச் செய்யப்பட்டார். தற்பொழுது இவ்வழக்கை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்பிருப்பது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வழக்கை ஏற்கனவே சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்பொழுது தங்களின் முக்கிய தலைவர்கள் இவ்வழக்கில் சிக்கிவிடுவார்கள் என அஞ்சி அவதூறுகளை பாசிச காவிகளை மிஞ்சும் வகையில் பரப்புரைச் செய்து வருகின்றனர்.
ஃபஸல் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ குழுவின் தலைவருக்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக சி.பி.எம்மின் கண்ணூர் மாவட்ட செயலாளர் பி.ஜெயராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது உண்மைக்கு முற்றிலும் புறம்பான கருத்தாகும். 2006-ஆம் ஆண்டு நடந்த ஃபஸல் கொலை வழக்கில் அன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு ஆதாரங்களை அழித்தும், சாட்சிகளை மிரட்டியும் விசாரணை குழுக்களை மாற்றியும் தனது ஆட்சி அதிகார செல்வாக்கை உபயோகித்தும் வழக்கை சீர்குலைக்க பல தடவை முயன்றது. தற்பொழுது உண்மை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் அவசரகோலத்தில் பதட்டமான அறிக்கையை வெளியிட்டு வருகிறது அக்கட்சி.
சி.பி.ஐ குழுவின் தலைவருக்கு, முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்பு என்று புரளியை கிளப்பி விட்டு விசாரணையை சீர்குலைக்க வேண்டும் என்பதே தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமாகும்.
கடந்த சி.பி.எம் தலைமையிலான அரசில் கல்வி அமைச்சராக பதவி வகித்த கோடியேரி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிக்கிவிடுவார்கள் என்ற அச்சமே இந்த படபடப்புக்கு காரணமாகும். சி.பி.எம் ஏரியா செயலாளர் கானாயி ராஜன் உள்பட குற்றம் சாட்டப்பட்ட தலைவர்களுக்கு பல தடவை நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அவர்கள் ஆஜராகவில்லை. ஃபஸல் கொலை வழக்கில் தங்களுக்கு பங்கில்லை என்று கூறும் சி.பி.எம் தலைவர்கள் ஏன் விசாரணைக்கு அஞ்சுகின்றனர்? தாங்கள் நிரபராதிகள் என்றால் சி.பி.ஐ அலுவலகத்திற்கு வந்து கூக்குரலிடாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த இக்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணையைத் துவக்கிய பிறகுதான் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் மீது அவதூறுகளை அள்ளி வீசி அவர்களை செயல்பட விடாமல் தடுக்கும் பாசிஸ்டுகளின் தந்திரத்தை சி.பி.எம் கையாளுகிறது.
அண்மையில் முஸ்லிம் லீக் கட்சிக்கு துவக்கத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ஐந்தாவது அமைச்சர் பதவியை காங்கிரஸ் அளித்தது. இதற்கு நாயர் சமூக அமைப்பான என்.எஸ்.எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இவ்வேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.எஸ்.எஸ் என்ற நாயர் ஜாதிக் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டது.
ஜாதி-மத காரணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கமாட்டோம் என கூறிக்கொண்டே பின்னணியில் உயர்ஜாதியினரின் ஆதரவை தேடி மார்க்சிஸ்ட் கம்யூனிச தலைவர்கள் அலைகின்றனர்.
சிறுபான்மை எதிர்ப்பு அணுகுமுறையின் மூலம் ஹிந்து வாக்குகளை ஒருங்கிணைத்து தங்களுக்கு சாதகமாக மாற்றலாம் என சி.பி.எம் தற்பொழுது முயன்று வருகிறது. கேரள மாநில சி.பி.எம் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் வெளிப்படையாகவே முஸ்லிம் எதிர்ப்பு மனோநிலைதான் காணப்படுகிறது.
கேரளாவின் முன்னாள் முதல்வரும், சி.பி.எம்மின் முக்கிய தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் சங்க்பரிவார சக்திகளின் மொழியில் தான் பெரும்பாலும் பேசி வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மலப்புர மாவட்ட மாணவர்கள் மிகச்சிறந்த வெற்றியை மாநில அளவில் பெற்றபொழுது அவர்கள் காப்பியடித்து தேர்வில் வெற்றிப் பெற்றார்கள் என்று முதல்வராக இருக்கும்பொழுதே அறிக்கை விட்டவர்தாம் வி.எஸ்.அச்சுதானந்தன். ஏனெனில் மலப்புறம் மாவட்டம் முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட மாவட்டமாகும்.
டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற வி.எஸ்.அச்சுதானந்தன் அங்கு செய்தியாளர்களிடம், கேரளாவை இஸ்லாமிய குடியரசாக மாற்றும் முயற்சி நடப்பதாக வெறித்தனமாக உளறிக் கொட்டினார்.
மாராடு என்ற இடத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம்கள் ஜாமீன் மறுக்கப்பட்டு பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், நீதிமன்றம் தண்டனை வழங்கிய பிறகும், இது போதாது என்று அவர்களுக்கு எதிராக மேல்முறையீடுச் செய்தது வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான சி.பி.எம் அரசு.
கோழிக்கோடு மாவட்டத்தில் கொடியத்தூர் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இக்கொலையை முஸ்லிம்களுடன் தொடர்பு படுத்தி தாலிபானிசம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர்ணித்தது.
கேரளாவில் சி.பி.எம்மிற்கும், ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் இடைவெளி குறைந்து வருகிறது. நாதாபுரம், கண்ணூர் ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களில் சி.பி.எம், ஆர்.எஸ்.எஸ்ஸை தோற்கடிக்கும் வகையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகிறது. கண்ணூரில் சி.பி.எம் கட்சியின் ஆதிக்கம் மிகுந்த கிராமங்கள் பலவற்றிலும் முஸ்லிம்களுக்கு வழிப்பாட்டு சுதந்திரம் கூட மறுக்கப்படுகிறது.
கேரளாவில் செங்கொடி காவியாக மாறிவருவது ஆபத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக