வியாழன், பிப்ரவரி 09, 2012

எகிப்து பாராளுமன்றத்தில் தொழுகைக்கான அழைப்பை விடுத்த எம்.பி !

Egyptian Salafi MP calls to prayer in parliament session, met with angerகெய்ரோ:எகிப்து பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது எம்.பி ஒருவர் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) கூறியது சர்ச்சையானது. கடந்த செவ்வாய்க்கிழமை அஸர்(மாலைநேர) தொழுகை வேளையில் ஸலஃபி கட்சியான அந்நூரை சார்ந்த எம்.பி மம்தூஹ் இஸ்மாயீல் எழுந்து அதான் கூற துவங்கினார். உடனே சபாநாயகர் ஸஅத் அல் கதாதனி அமைதியாக அமருமாறு
கூறினார். ஆனால் இஸ்மாயீல் அதனை பொருட்படுத்தாமல் தனது அதானை பூர்த்தி செய்தார்.
‘நீங்கள் வேண்டுமானால் வெளியே மஸ்ஜிதுக்கு சென்று அதான் கூறி தொழுகை நடத்துங்கள். இது விவாதம் நடைபெறும் இடம்’ என சபாநாயகர் கூறினார். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு வழிகளை தேடலாம் என கூறிய சபாநாயகர் நடப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற கூட்டத்தின்போது எம்.பிக்களுக்கு தொழுகை நஷ்டப்படுவதாகவும், இது குறித்து தீர்வு காணலாம் என கூறிய சபாநாயகர் தனது வாக்குறுதியை பேணவில்லை என்றும் இஸ்மாயீல் குற்றம் சாட்டினார். அதேவேளையில் கால்பந்து விளையாட்டு இஸ்லாத்திற்கு எதிரானது என ஸலஃபி மார்க்க அறிஞர் ஷேக் அப்துல் முனீம் அல் ஷாஹத் ஃபத்வா(மார்க்க தீர்ப்பு) வழங்கினார். பின்னர் அவரது தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து தனது தீர்ப்பை திருத்தி வெளியிட்டார். வர்த்தகம் அடிப்படையிலான கால்பந்து விளையாட்டை இஸ்லாம் தடுத்துள்ளது என அவர் விளக்கம் அளித்தார்.
கடந்த வாரம் எகிப்தில் கால்பந்து போட்டி நடக்கும் போது ஏற்பட்ட கலவரத்தில் 74 பேர் மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஷேக் அப்துல் முனீம் இந்த ஃபத்வாவை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக