வியாழன், பிப்ரவரி 23, 2012

தமிழகத்தில் 1980ல் என்டர் ஆகி இதுவரை 75 பேரை காவு வாங்கியுள்ள போலீஸ் என்கவுண்டர் !

Vellai Ravi and Venkatesa Pannaiyarசென்னை: தமிழகத்தில் இதுவரை போலீஸ் என்கவுண்டருக்கு 75 பேர் வரை பலியாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1980ம் ஆண்டுதான் இது அறிமுகமானது. போலீஸ் என்கவுண்டர்கள் என்றாலே பெரும்பாலும் சர்ச்சைகள்தான் மேலோங்கி நிற்கும். பல என்கவுண்டர்கள் செட்டப் செய்யப்பட்டவை என்ற குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகள் எழுந்தாலும் கூட என்கவுண்டர்களுக்கு முடிவே இல்லாமல் நீண்டுகொண்டுதான் உள்ளது.

இப்போது கூட சென்னை வேளச்சேரியில் ஐந்து வங்கிக் கொள்ளையர்கள் போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டிருப்பதும் கூட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட என்கவுண்டர் எப்படி வந்தது தமிழகத்திற்குள். அதுகுறித்த ஒரு பார்வை...

தமிழகத்தில் 1980களில் நக்சலைட்கள் அட்டகாசம் தலை தூக்கியது அப்போதுதான் முதல் முறையாக என்கவுண்டர் கொலைகள் நடந்தேறின. நக்சலைட்கள் பலர் போலீஸாருடன் நடந்த மோதலின்போது கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் 1998ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி அருகே நடந்த மோதலின்போது ரவுடி ஆசைத்தம்பியும், அவனது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2002ம் ஆண்டு தமிழக போலீஸ் படை பெங்களூர் சென்று அங்கு பதுங்கியிருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்றது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2003ம் ஆண்டு சென்னையில் வெங்கடேச பண்ணையார் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் சென்னை கடலில் வைத்து சென்னை மாநகரையே நடு நடுங்க வைத்த பிரபல தாதா அயோத்தியா குப்பம் வீரமணி சுட்டு வீழ்த்தப்பட்டான்.

2007ம் ஆண்டு சென்னையை கலங்க வைத்த ரவுடிகளில் ஒருவனான வெள்ளை ரவுடி போலீஸ் படையால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டான்.

2010ம் ஆண்டு கோவையில், பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த வழக்கில் கைதாகி, விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்.

அதே ஆண்டு, திண்டுக்கல்லைச் சேர்ந்த பாண்டு உள்ளிட்ட 2 பேர் சென்னை அருகே நீலாங்கரையில் வைத்து என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் காவல்துறை சிம்ம சொப்பனமாக இருக்கும். கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜெயலலிதா பதவிக்காலத்தில் மட்டும் 11 ரவுடிகளை போலீஸார் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னை மாநகர ஆணையராக விஜயக்குமார் இருந்தபோதுதான் வீரமணி, வெங்கடேச பண்ணையார் ஆகியோர் சுட்டுக் கொல்லபப்ட்டனர். மேலும் தமிழ் தேசியவாதிகளான ராஜாராம் மற்றும் சரவணன் ஆகியோரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

என்கவுண்டரைப் பொறுத்தவரை திமுக ஆட்சிக்காலத்தில் அதிக அளவில் நடப்பது வழக்கமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக