திங்கள், பிப்ரவரி 27, 2012

அரசு பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் !

No powercut in Schools.பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்கப்படும். அவ்வாறு வழங்க முடியாத இடங்களில், பள்ளிகளே ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். அதற்கு ஆகும் கூடுதல் செலவை அரசே ஈடுசெய்யும் என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்க, முந்தைய தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்காததால், தமிழகம் தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.
ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது. என் முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தித் திட்டங்களைக் கூட முந்தைய தி.மு.க., அரசு செயல்படுத்த தவறிவிட்டது.மேலும், செயல்படுத்தப்படும் திட்டங்களும் உரிய காலத்தில் முடிக்கப்படாததால், நமக்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. முந்தைய அரசு, அன்றாடம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தது. நீண்டகால மின்சார கொள்முதலுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை பெற இயலவில்லை.

அன்னியர் பிரச்னை வேறு இது தவிர, மின் தொடர் அமைப்பில் நெருக்கடி உள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து தேவையான மின்சாரம் பெற இயலவில்லை. உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெற ஒரு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருந்தாலும், தற்போதுள்ள மின் தொடர் நெருக்கடியின் விளைவாக, அதிலிருந்து தற்போது 235 மெகாவாட் அளவுக்கே மின்சாரம் பெற இயலுகிறது. இதனால், மின் இருப்புக்கும், மின் தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது.

அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடரும்?
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறை குறித்து மின்வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் இம்மாதம் 17 மற்றும் 23ம் தேதிகளில் விரிவாக ஆய்வு நடத்தினேன். தமிழகத்தில் தற்போது மின் தேவையின் அளவு 11 ஆயிரத்து 500 முதல் 12 ஆயிரத்து 500 மெகாவாட் வரை உள்ள நிலையில், தமிழக மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களில் இருந்து பெறப்படும் மின்சாரம் 8,500 மெகாவாட் என்ற அளவில் தான் உள்ளது.அதாவது, 3,000 முதல் 4,000 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை உள்ளது. எனவே, கிடைக்கப் பெறும் மின்சாரம் குறையும் போது, அறிவித்ததற்கும் மேலான மின்வெட்டு தவிர்க்க இயலாததாகிறது. அவ்வாறு முறையாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.தற்போதுள்ள இக்கட்டான மின் நிலையை சமாளிக்கும் வகையிலும், தொழில் துறையினர் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், மின் வாரியம் செயல்படுத்த உள்ள மின் வினியோக கட்டுப்பாட்டு முறைகளை, மின் வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு எழுதலாம்; படிப்பது எப்படி?
மின் வாரியம் செயல்படுத்த உள்ள இந்த மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும். ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும்.இதேபோல, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசு அவர்களுக்கு ஈடுசெய்யும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக