வியாழன், பிப்ரவரி 23, 2012

இம்சை அரசன் 2012 ம் புலிகேசி !

     இந்தியாவில் விவசாயம் அழிந்து வருகிறது. நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் உணவு தேவையை வரும் காலங்களில் நாம் எப்படி சம்மாளிக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுத்துள்ளது. ஒருபுறம் விவசாயத்திற்கு தேவையான போதிய மழை இல்லாதது மறுபுறம் உரம், விதை போன்றவற்றின் விலை உயர்வால் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்தோடுதற்கொலை செய்து கொள்வது அன்றாடம் செய்தி ஆகிவிட்டது. இதுவரை உரங்களின் விலையை கட்டுபடுத்தி வந்த மத்திய அரசு இனி அதை உரகம்பெனிகளே தீர்மானித்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது. இதை தொடர்ந்து உர நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கொண்டு விலைகளை கண்டபடி உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் உரங்களை பதுக்கல் வியாபாரிகள் கள்ளச்சந்தையில் விற்று கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இந்தியாவில் உற்பத்தியாகும் உரங்களுக்கு மத்திய அரசு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. அதையும் அதிக உற்பத்தி செய்ததாக போலி ஆவணங்களை காட்டி கொள்ளை அடிக்கின்றன இந்த உர நிறுவனங்கள்.

இப்படியாக விவசாயிகளை, விவசாயத்தை கவனிக்காத அரசு! வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய மண்ணுக்கு இறக்குமதி செய்வதிலேயே குறியாக இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் தொழில் சாலைகளை தொடங்கி நமக்கு சுமூக சேவை செய்ய வந்திருப்பதாக நிறைய மக்கள் தவறாக புரிந்துள்ளார்கள். அவர்கள் இந்தியா வந்திருப்பதன் நோக்கம் குறைவான ஊதியத்தில் வேலைக்கு ஆட்கள், ஊழியர்களின் மருத்துவம் மற்றும் பாதுகாப்புக்கு செலவிடும் தொகை ஆகியவற்றை மிச்சம் பிடித்து நாட்டை சுரண்டவே.

தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை எங்கு வேண்டுமானாலும் கொட்டிவிடலாம். அதற்காக செலவழிக்கும் தொகை மிகவும் குறைவு போன்ற காரணங்களுக்காகவே அத்தனை நிறுவனங்களும் இந்தியாவை நோக்கி படை எடுக்கின்றன. எதிலும் ஒரு முறையான சட்ட திட்டங்கள் பயன்படுத்தப்படாத, ஒரு ஊழல் நிறைந்த நாட்டில்தான் இது போன்ற நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும். இந்தியாவை மொட்டை அடிக்க வந்த கார்பரேட் நிறுவனங்களை வளப்படுத்த வந்த நிறுவனங்களாக நம் தேசபக்தி கயவர்கள் பெய் பிரச்சாரம் செய்கின்றனர். 

இம்சை அரசன் 23 ம் புலி கேசியில் வரும் அரசனை போன்று நம் மன்மோகன் ஆட்சி செய்கிறார்.ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவின் மதவாதம் ஒருபுறமும் அந்நிய முதலாளிகளுக்கு எடுபிடி வேலை செய்யும் எட்டப்பர்கள் மறுபுறமும் என்று இந்தியா ஒளிர்கிறது.  மாவீரன் திப்புசுல்தான், நேதாஜி, போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வழியில்  மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை தொடங்கும் காலம் வந்து விட்டது. விவசாயத்தை அழித்து கட்டிடங்கள், தொழில்சாலைகள் என்று நிறுவி வரும் சூழலில் பஞ்சம் ஏற்ப்பட்டால் மக்களின் நிலைமை அதோ கதிதான். சிறிய நாடு சோமாலியாவுக்கு உணவு கொடுக்க உலகத்தால் முடியவில்லை நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நமக்கு யார் உணவுதருவார்கள்?. 
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக