வெள்ளி, மே 03, 2013

சென்னை காவல்துறை கண்காணிப்பில் சமூக வலைதளங்கள்!

சமூக வலைதளங்கள் குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைதளங்களை கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. சமீபகாலமாக ஸ்மார்ட் போன்கள் வந்த பின்னர் வலைதளங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

பலர் நன்மையான விசயங்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதிகமான அளவிற்கு சிலர் தவறான நோக்கத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக, காவல்துறைக்கும் அவ்வப்போது புகார்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே இணைய தளங்களை கண்காணித்த காவல்துறையினர், சமீபத்தில் நடந்த மாணவர் போராட்டத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே காவல்துறையினர் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனால்தான், ஃபேஸ்புக், ட்விட்டர் இணையதளத்தை காவல்துறையினர் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வலைதளங்களை கண்காணிக்க, இணை கமிஷ்னர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், ஃபேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை கண்காணித்து, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள், தகவல்களை பரிமாறும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய முடிவு செய்துள்ளனர். அதையும் மீறி செயல்பட்டால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதோடு, குறிப்பிட்ட ஃபேஸ்புக், ட்விட்டர் முகவரியை முடக்க முடிவு செய்துள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக