வெள்ளி, மே 31, 2013

தமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்களை உபசரித்த பள்ளிவாசல்!

தமக்கு எதிராகப் போராட்டம் நடத்த வந்த கடும்போக்காளர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் கொடுத்து ஒரு பள்ளிவாசல் உபசரித்திருக்கிறது. பிரிட்டனில் நடந்த இந்தச் சம்பவத்தை பல தரப்பினரும் பாராட்டியிருக்கிறார்கள்.

அண்மையில், லண்டனில் பிரிட்டிஷ் படைச் சிப்பாய் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பல இடங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதுடன், அவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன.
இவ்வாறான பல ஆர்ப்பாட்டங்கள் வலதுசாரிக் குழுவான ''இங்கிலிஸ் டிபன்ஸ் லீக்'' என்னும் அமைப்பின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுள்ளன.
அப்படியான ஒரு ஆர்ப்பாட்டம் யோர்க்கில் இருக்கின்ற புல் லேனில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிராகவும், கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்டுள்ளது.
அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக 6 பேர் அங்கு கூடியுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதை அறிந்து அந்தப் பள்ளிவாசலின் ஆதரவாளர்கள் சுமார் 100 பேரும் அங்கு திரண்டுவிட்டனர்.
ஆனால் அந்த பள்ளிவாசலைச் சேர்ந்தவர்களோ அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை உள்ளே அழைத்து அவர்களுக்கு டீ, பிஸ்கட் கொடுத்து உபசரித்து, அவர்களுடன் கால்பந்தும் விளையாடியிருக்கிறார்கள்.
இதனை, யோர்க் பிராந்தியத்துக்கான ஆயர் டாக்டர் ஜோண் செண்டமு அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
''டி, பிஸ்கட், கால்பந்து என்பது யோர்க் பகுதிக்கான ஒரு பிரத்தியேக உபசரிப்பு முறை'' என்று அவர் பாராட்டியுள்ளார். கடும்போக்கு கருத்துக்களுடன் வருபவர்களை தணிக்க இது மிகவும் சிறப்பான உபசரிப்பு என்றும் அவர்கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக