செவ்வாய், மே 28, 2013

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை!

பெங்களூரு : பெங்களூரூ பாஜக அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் உண்மையை வெளிக்கொணர இவ்வழக்கை சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பின் கர்நாடக மற்றும் தமிழக தலைவர்களான ரமேஷ் மற்றும் பவானி மோகன் ஆகியோர் தாங்கள் அமைத்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையின் படி இவ்வழக்கில் காவல்துறையினர் முன்னாள் கர்நாடக ஆட்சியாளர்களை திருப்திபடுத்த சிறுபான்மை இனத்தை சார்ந்த அப்பாவிகளை கைது செய்துள்ளனர் என்றும் இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொணர சிபிஐ வசம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.

இக்குண்டுவெடிப்பை அல் உம்மாவின் மேல் திருப்ப வேண்டும் என்ற முன்முடிவுக்கேற்ப இரு மாநில காவல்துறையும் இணைந்தே கிச்சான் புகாரியை கைது செய்ததாக கூறிய பவானி மோகன் பொய்யான வாக்குமூலத்தை பெற காவல்துறை கைதிகளை சித்ரவதைப்படுத்தியதாகவும் கூறினார். கைதிகளை எவ்வாறு சித்ரவதைப்படுத்துகின்றனர் என்ற அவர்களின் குடும்பத்தினரின் வாக்குமூலத்தை நேற்று இந்நேரத்தில் ஒரு வாசகர் செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட கிச்சா புகாரியிடம் மதானி தான் இக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரி என்று கூறுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் மேலப்பாளையத்தை சார்ந்த கைதி பீர் மொய்தீனிடம் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக வாக்குமூலம் கொடுக்க சொல்லி காவல்துறை சித்ரவதை செய்ததாக பவானி மோகன் கூறினார்.


பிஜேபிக்கு அனுதாப ஓட்டுகள் விழும் வகையில் தேர்தலுக்கு முன் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் இந்துத்துவ இயக்கங்களுக்கு குண்டு வெடிப்பில் உள்ள தொடர்பு குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் பவானி மோகன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக