வெள்ளி, மே 10, 2013

சி.பி.ஐ-எஜமானர்களின் குரல்களை ஒலிக்கும் கூண்டு கிளி!-உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம்!

புதுடெல்லி: மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ கூண்டுக் கிளியாக இருக்கிறது, எஜமானர்களின் குரல்களைத்தான் அது ஒலிக்கிறது என்று இந்திய உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் தொடர்பாக சிபிஐ கொடுத்த விசாரணை அறிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தொலை தொடர்புத் துறையில் நடைபெற்ற அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலை விட பெரிய ஊழல் என்று எதிர்க்கட்சிகளால் வர்ணிக்கப்படும் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணையில் மத்திய அரசாங்கத்தின் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விசாணை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கு மாறாக , அந்த அறிக்கை சட்ட அமைச்சரும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கும் காட்டப்பட்டு அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் இணைத் செயலர் தரத்தில் உள்ள அதிகாரிகளும், நிலக்கரி அமைச்சக அதிகாரிகளும் சிபிஐ அதிகாரிகளை சந்தித்து , விசாரணை அறிக்கையில் மாற்றங்களை கோரியதை சற்றும் ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் , இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நிலக்கரி அமைச்சக அதிகாரிகளையும் விசாரணை செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும் நினைவுபடுத்தினர். நடப்பது மிகவும் வருத்தமானது , கூண்டுக் கிளியாக இருக்கும சிபிஐ தனது எஜமானரின் எண்ணத்தையே ஒலிக்கிறது என்று சாடியது நீதிமன்றம்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தாக்கல் செய்திருந்த 9 பக்க அறிக்கையில் சட்ட அமைச்சர் அஷ்வினி குமார், சிபிஐயின் விசாரணையின் வரைவு அறிக்கையில் முக்கிய மாற்றங்களைச் செய்தார் என்றும் அரசின் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் சில மாற்றங்களை செய்யுமாறு யோசனை வழங்கியதாகவும் கூறப்பட்டிருந்தது. இது போன்ற அழுத்தங்களை எதிர் கொள்ள சிபிஐ ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இது போன்ற குறுக்கீடுகள் நீதீயின் பாதையில் தடையை ஏற்படுத்துவதாக இருக்காதா என்றும் கேட்டனர்.
இருந்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் மாறவில்லை என்று சிபிஐ வாதிட்டது. இதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. விசாரணையின் போக்கே மாறிச் சென்றுவிட்டது என்ற நீதிமன்றம் கூறியது. சிபிஐ அமைப்பை நிர்வாகம் செய்வதில்தான் அமைச்சருக்கு அதிகாரம் உள்ளதே தவிர அதன் விசாரணைகளில் குறுக்கிட அதிகாரம் கிடையாது என்று கூறிய நீதிபதிகள் இது தொடர்பாக அரசின் மூத்த சட்ட அதிகாரியான அட்டார்னி ஜெனரலின் செயல்பாட்டையும் விமர்சித்துள்ளனர்.
சிபிஐ நிறுவனத்தை அரசின் கைகளில் இருந்து விடுவித்து அதை சுதந்திரமாக செயல்படும் வண்ணம் உரிய சட்ட மாற்றங்களைக் கொண்டு வர அரசிடம் யோசனை ஏதும் இருக்கிறதா என்றும் நீதிபதிகள் கேட்டனர். வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதிக்குள்ள வெளித் தலையீடுகளில் இருந்து சிபிஐயைப் பாதுகாக்கும் சட்டத்தை கொண்டு வர அரசு முற்பட வேண்டும் என்றும் நீதிபதி லோதாதலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விசாரணை விவரங்களை அரச அதிகாரிகள், சட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் என யாரிடமும் சிபிஐ பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று கூறிய நீதிபதிகள் சிபிஐ இயக்குனர் மற்றும் விசாரணையில் ஈடுபடும் 33 அதிகாரிகள் குழுவைத் தாண்டி விபரங்கள் செல்லக் கூடாது என்றனர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட டிஐஜி ரவி காந்த் மிஸ்ரா அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதற்கும் நீதிமன்றம் ஆட்சேபம் வெளியிட்டது.தற்போது இன்டலிஜன்ஸ் பிரோவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள ரவி காந்த் மிஸ்ரா உடனடியாக சிபிஐக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்துக்கு அரசு உள்ளான நிலையில், சட்ட அமைச்சரும் அட்டார்னி ஜெனரலும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக