புதன், ஜனவரி 25, 2012

முஸ்லிம்கள் தத்து எடுக்க சட்டப்படி உரிமை இல்லை: மதுரை உயர்நீதிமன்றம் !

ஈரோடு அவந்தியாபாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவருடைய மனைவி மாலா. இவர்களுக்கு கிரிதரன்(வயது 4) என்ற மகன் உள்ளான். கடந்த 2008- ஆம் ஆண்டு சிவப்பிரகாசம் ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதன்பின்பு மாலா திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

தன் மகன் கிரிதரனை, திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் ஷேக் தாவூது என்பவர் நடத்தி வந்த குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விட்டார். இதற்காக மாதம் 1,000 ரூபாய் அவர் செலுத்தி வந்தார்.

இந் நிலையில் தன் மகனை பார்ப்பதற்காக மாலா சென்ற போது, காப்பகம் செயல்பட்டு வந்த இடத்தை மாற்றி இருப்பது தெரியவந்தது. மேலும் காப்பகம் செயல்பட்டு வரும் இடம் குறித்து காப்பகத்தின் நிர்வாகி ஷேக் தாவூது எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இதனால் தன் மகனை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாலா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சிறுவன் கிரிதரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஷேக்தாவூது, மாலா ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

ஷேக்தாவூது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிரிதரனை அவருடைய தாயார் தத்து கொடுத்து விட்டதாக கூறி அதற்கான ஆவணத்தை நீதிபதியிடம் கொடுத்தார். அந்த ஆவணத்தில் புனிதா என்பவர் தத்து கொடுத்தது போன்று இருப்பதை பார்த்த நீதிபதிகள், இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

மாலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவசுந்தரம், சிறுவனை தத்து கொடுக்கவில்லை என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

மனுதாரர் தன் மகனை தத்து கொடுத்ததாக ஷேக் தாவூது கூறுவதை ஏற்க இயலாது. இந்து தத்து எடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் இந்துக்கள் மட்டுமே தத்து எடுக்க அனுமதிக்கிறது.

ஷேக் தாவூது முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் தத்து எடுக்க சட்டப்படி உரிமை இல்லை. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. 

எனவே சிறுவன் கிரிதரனை, அவருடைய தாயாருடன் அனுப்பி வைத்து உத்தரவிடப்படுகிறது. மனுதாரருக்கும், அவருடைய குழந்தைக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக