வெள்ளி, ஜனவரி 27, 2012

மின்னஞ்சல்களை உளவு பார்ப்பதில்(snoop) இந்தியாவுக்கு 3-வது இடம் !

email_snoopகேரள மாநிலத்தில் முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகள் போலீசாரால் ரகசியமாக கண்காணிக்கப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய வேளையில் உலகிலேயே தனிநபர்களின் மின்னஞ்சல்களை கண்காணிப்பதில் இந்தியா 3-வது இடத்தை வகிப்பதாக பிரபல இணையதள
சேவை நிறுவனமான கூகிள் அறிக்கை கூறுகிறது.
பயனீட்டாளர்களின் விபரங்களை கண்டிபிடிக்க தங்களை அணுகுவதில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து இந்தியா உள்ளதாக கூகிளின் வெளிப்படையான(transparency) அறிக்கை கூறுகிறது.
தங்களுக்கு தேவையான விபரங்களை தேடி கூகிளை இணையதள பயனீட்டாளர்கள் அணுகும் தற்காலத்தில் தனிநபர்களின் அந்தரங்க விபரங்களை அறியவும் அரசுகள் கூகிளை அணுகும் தகவல் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து தெரியவருகிறது.
தகவல் தொடர்பில் பெரும்பாலும் வெளிப்படையான தன்மையை உறுதிச்செய்யும் முயற்சியின் ஒருபகுதியாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூகிள் ட்ரான்ஸ்ஃபரன்சி அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
2010-ஆம் ஆண்டு மட்டும் இந்திய அரசு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனீட்டாளர்களின் விபரங்களை கூகிளிடமிருந்து ரகசியமாக உளவு அறிந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களின் கருத்துக்களை அழிக்கவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கூகிள் சேவைகளில் 68 கருத்துக்களை நீக்க இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால் அவற்றில் 51 சதவீதம் மட்டுமே அங்கீகரித்ததாக கூகிள் ட்ரான்ஸ் ஃபரன்சி அறிக்கை கூறுகிறது.
2011-ஆம் ஆண்டில் விளக்கமான அறிக்கை இனிமேல் வெளியிடப்படும். கூகிள் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயில் மூலமாக பல்வேறு நபர்கள் நடத்திய தகவல் தொடர்பும் அவர்களுடைய இணையதள செயல்பாடுகளின் விபரங்களும் அரசு கோரியுள்ளது.
மத,சமூக தலைவர்களுக்கு எதிரான யூ ட்யூப் வீடியோக்களை நீக்கவும் அரசு மற்றும் நீதிமன்றங்களில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்படும். ஆனால் அவற்றில் சமூக மரியாதைகள் மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு எதிரானவை என்பது உறுதிச் செய்யப்பட்டால் மட்டுமே நீக்கம் செய்யப்படும் என கூகிள் கூறுகிறது.
மாநில முதல்வர்கள், பல்வேறு மாநிலங்களின் உயர் அதிகாரிகளை விமர்சிக்கும் சில வலைப்பூக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை நீக்குவதற்கு இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்ததாகவும் கூகிள் கூறுகிறது. உள்நாட்டு தேசிய தலைவர் ஒருவருக்கு எதிரான 236 கம்யூனிட்டிகளும், ஃப்ரொஃபைலும் நீக்குவதற்கு இணையதளத்தில் நட்புறவு தளமாக கருதப்படும் ஆர்குட்டிடம் அரசு கோரிக்கை விடுத்தது என கூகிள் அறிக்கை கூறுகிறது.
இணயதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை நீக்குவதற்கு கோரிக்கை விடுப்பதில் இந்தியா 5-வது இடத்தை வகிக்கிறது. பிரேசில், தென் கொரியா, ஜெர்மனி, லிபியா ஆகியன முந்தைய இடங்களை வகிக்கின்றன.
அமெரிக்கா 2010-ஆம் ஆண்டு 8888 மின்னஞ்சல் பயனீட்டாளர்களின் விபரங்களை கூகிளிடம் கோரியுள்ளது. பிரேசில் 4239 பயனீட்டாளர்களின் மின்னஞ்சல் விபரங்களையும், இந்தியா 3129 பயனீட்டாளர்களின் மின்னஞ்சல் விபரங்களையும்
கூகிளிடம் கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக