சனி, ஜனவரி 28, 2012

கேடுகெட்ட சுகாதாரத்துறை! 100 குழந்தைகள் பலி!

 மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சுமார் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.  26  நாட்களுக்குள் நூறு குழந்தைகள் சாவுஎன்று சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரியே ஒத்துக்கொள்கிறார் என்றால் சாவின் எண்ணிக்கை எத்தனை மடங்காக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். இப்படி கேடுகெட்ட ஒரு சுகாதாரத்துறை நமக்கு தேவையா? அடிப்படை சுகாதார, மருத்துவ வசதிகள் கூட இல்லாத ஒரு நாட்டில்தான் நாம் வசிக்கிறோம். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யாமல் அழிவு ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் ஆனந்தம் அடைவதேன்? ஆடம்பர விழாக்களை நடத்துவதேன்?  ஒரு நாட்டின் வருங்கால சந்ததிகளை மழலைகளை  காப்பாற்ற  துப்பில்லாத நமக்கேன் இந்த வல்லரசு குடிபோதை.

இந்த போதையால் வாங்கி குவித்த ஆயுதங்களால் என்ன பயன். துருபிடித இந்த ஆயுதங்களை  குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில்தானே தூசு தட்டுகிறோம். அணுவுலைகள்  இல்லாத ஒரு மாவட்டத்தில் வாழும் குழந்தைகளையே நம்மால் பாதுகாக்க முடியவில்லை. அணு உலைகள் இருக்கும் மாவட்டங்களின் நிலைமையை நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளதே. அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவினால் ஏற்ப்படும் சுகாதார குறைவையும், நோய்களையும் நாம் எப்படி தீர்க்கப்போகிறோம்.

போபால் நமக்கு ஒரு முன்னுதாரணம், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இன்னும் நஷ்ட்ட ஈடுகள் கொடுக்க முடியவில்லை. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில்  பஞ்சம் மற்றும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க நம்மிடம் என்ன திட்டம் இருக்கிறது. சீன தனது நாட்டை பஞ்சத்தில், வரட்சியில் இருந்து பாதுகாக்க பிரமபுத்திரா நதியின் குறுக்கே ஒரு அணையை கட்டி இருக்கிறது. நாம் இருக்கிற நதிகளை பங்கிட தெரியாமல் தவிக்கிறோம்.மக்கள் விழிப்படைவார்களா?

கூடங்குளம் மக்களின் போராட்டம் நியாயமானதே என்பதை நிரூபிக்கும்
நிதர்சனமான ஒரு உதாரணம் இது. மொத்த தமிழகமும் சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை தடுத்து நிறுத்த வேண்டும். 

ரௌத்திரம் பழகு 
...யாழினி..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக