வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

செவ்வாய் கிரகத்தில் அங்குமிங்கும் அசைந்தாடும் மர்மபொருள். விஞ்ஞானிகள் அதிர்ச்சி !

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் மர்மமான பொருள் குறித்து, விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பூமியில் இருந்து, 57 கோடி கி.மீ., தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆராய, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, "நாசா' சார்பில் "கியூரியாசிட்டி ரோவர்' விண்கலம் அனுப்பப்பட்டது. செவ்வாயின் சுற்றுச்சூழல் அமைப்பு, பாறைகள் மற்றும் மண்ணுக்கு அடியில் ஹைட்ரஜன் அளவு போன்ற பல்வேறு
அம்சங்களை ஆராய, 10 உபகரணங்களுடன் கடந்த, 6ம் தேதி செவ்வாயில் தரையிறங்கிய, "கியூரியாசிட்டி' திட்டமிட்டபடி, தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.முதல்கட்டமாக, செவ்வாயின் நிலப்பரப்பை பல்வேறு திசைகளில் இருந்து படம் பிடித்து, பூமிக்கு அனுப்பியது.செவ்வாய் கிரகத்தின் அடிவானத்தில், மர்மமான யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் காண முடியாத புதிரான பொருள், அங்குமிங்கும் அசைந்தாடுவதை, "கியூரியாசிட்டி' படம் பிடித்துள்ளது.
வேற்று கிரகவாசிகள் தான், செவ்வாயில் மனிதனின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது, வழக்கமாக கிராபிக் தொழில்நுட்பத்தில் காணப்படும், "டெட் பிக்சல்'கள் என, விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர்.வேற்று கிரகவாசிகள் மற்றும் விண்வெளியில் உள்ள அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வரும், பிரிட்டனைச் சேர்ந்த, "அலீன் டிஸ்க்ளோசர்' அமைப்பின் ஸ்டீபன் ஹன்னார்டு என்பவர், "கியூரியாசிட்டி' அனுப்பிய வீடியோ படங்களை தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.
சமீபத்தில், "கியூரியாசிட்டி' அனுப்பிய படத்தில், செவ்வாயின் அடிவானத்தில் அடையாளம் காண முடியாத, பறக்கும் தட்டு போன்ற ஒரு மர்மப் பொருள், வெள்ளை நிறத்தில் அங்குமிங்கும் பறந்து திரிவதை ஹன்னார்டு கண்டுபிடித்துள்ளார்.அவர் கூறுகையில், ""கியூரியாசிட்டி' அனுப்பிய வீடியோவில், செவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட்களை காண முடிகிறது. அவை என்ன? அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களா, துகள்களா? எனத் தெரியவில்லை,'' என்றார்.
ஆனால், செவ்வாயில், புவிகிரகவாசிகளின் நடவடிக்கைகளை வேற்று கிரக சக்திகள், பறக்கும் தட்டுகளின் மூலம் வேவு பார்ப்பதையே "கியூரியாசிட்டி'யின் வீடியோ பதிவுகள் காட்டுவதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.இதற்கிடையே, செவ்வாயில் தரையிறங்கிய இடத்தில் இருந்து, ஆறு மீட்டர் தூரத்துக்கு, "கியூரியாசிட்டி ரோவர்' நகர்ந்து சென்று, ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக, "நாசா' நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக