சனி, ஆகஸ்ட் 25, 2012

தி.மு.க.வுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தொன்று தொட்டு உறவு: எஸ்.டி.பி.ஐ நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு !

தி.மு.க.வுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தொன்று தொட்டு உறவு: மு.க.ஸ்டாலின் பேச்சுஇந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெக்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரபீக் அகமது, துணைத்தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.சையது இப்ராகீம், ஜி.அப்துல் சத்தார், வி.எம்.அபுதாகீர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க.வுக்கும், முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடையேயான உறவு தேர்தலுக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்திற்காகவோ ஆனது அல்ல. இந்த உறவு தொன்றுதொட்டு இருந்து வரும் உறவு. ஒடுக்கப்பட்ட மக்களின், சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த முஸ்லிம் சமுதாயத்தோடு நீண்ட காலமாக தொடர்பு வைத்திருக்கும் இயக்கம் தி.மு.க., நீண்ட காலமாக தொடர்புவைத்திருக்கக்கூடிய தலைவர் கருணாநிதி.
 
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கின்ற இயக்கமாக எஸ்.டி.பி.ஐ. இயக்கம் இருந்து வருவது பாராட்டுக்குரியது. இன்று மத்திய-மாநில அளவில் எத்தனையோ பிரச்சினைகள், இலங்கை தமிழர் பிரச்சினை, சேது சமுத்திர திட்ட பிரச்சினை, முல்லை பெரியார் பிரச்சினை, எல்லாவற்றுக்கும் மேலாக விலைவாசி உயர்வு பிரச்சினை. இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்து அதற்காக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ. திகழ்கிறது.
 
தமிழகம் எத்தனையோ தேர்தல்களை பார்த்தது உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் கட்சி கூட்டணி முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது தி.மு.க.வும், முஸ்லிம் லீக்கும்தான். 1962-ம் ஆண்டு இரண்டு கட்சிகளும் தேர்தலில் கூட்டுசேர்ந்து போட்டியிட்டன. 1967-ம் ஆண்டு தொடர்ந்து கூட்டணி நீடித்து அதன்காரணமாக தி.மு.க. ஆட்சியையும் பிடித்தது.இப்படி முஸ்லிம் சமுதாயத்துடன் தி.மு.க. தொடர்ந்து உறவு வைத்து வருகிறது. அந்த உறவு எஸ்.டி.பி.ஐ. மூலமாக மேலும் வளரும்.
 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் ஏ.இ.அப்துல் ரகுமான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், பேராயர் எஸ்றா சற்குணம், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை.நாசர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
 
முன்னதாக, எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் அமீது அனைவரையும் வரவேற்றார். இறுதியில், மற்றொரு மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் நன்றி கூறினார்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக