வியாழன், ஆகஸ்ட் 30, 2012

சீனாவுக்கு செக் வைக்க ஈரான் துறைமுகத்தை விரிவாக்கம் செய்கிறது இந்தியா !

India India Iran Step Up Economic Ties டெஹ்ரான்: அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்தாலும் அந்நாட்டின் ஷா பஹார் (Chah Bahar) துறைமுக விரிவாக்க திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது இத்திட்டத்துக்காக இந்தியா ரூ400 கோடி அளவு முதலீடு செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஈரான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஈரான் நாட்டு மதத் தலைவரான கொமேனியையும் அதிபர் அகமத் நிஜாத்தையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தத்
தலைவர்களுடன் இந்திய பிரதமரின் சந்திப்பு சம்பிராதயமான இருநாட்டு தலைவர்களின் சந்திப்பைப் போல் இல்லை. அதுவும் கொமேனியுடன் இந்திய பிரதமர் ஒருவர் சந்தித்துப் பேசுவது என்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையும்கூட. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் மேற்காசிய நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாகவும் பயங்கரவாதம் தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஷா பஹார் துறைமுக விரிவாக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானின் துறைமுகத்தை இந்தியா விரிவாக்கம் செய்வது ஏன்?
ஈரானுடனான இந்திய வர்த்தக உறவானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்த பின்னர் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் ஈரானை மிகவும் ஒரு முக்கிய நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்து வருகிறது.
தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவைச் சுற்றிய அனைத்து நாடுகளிலும் இந்தியாவுக்கு எதிராக தமது ராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கிறது சீனா. இதேபோல் மத்திய ஆசியாவிலிருந்து சீனாவுக்கு கடல்வழியே கொண்டு செல்லப்படுகிற எண்ணெய் போக்குவரத்துக்கு இடையூறு எதுவும் வந்துவிடாத வகையில் பாகிஸ்தானின் கத்வார், மாலத்தீவு மற்றும் இலங்கையின் அம்பந்தோட்டா ஆகியவற்றில் தமது கடற்படையை நிலை நிறுத்தி இருக்கிறது. மாலைத்தீவில் நீர்மூழ்கித் தளமே அமைத்திருக்கிறது. சீனாவுக்கும் இடையே மோதல் ஒன்று எதிர்காலத்தில் நிகழக் கூடுமெனில் சீனாவின் கடல்வழி எண்ணெய் போக்குவரத்துக்கு எங்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு
இந்தியாவோ சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் நட்பு நாடுகள் என்று நம்பிக் கொண்டே ஏமாந்து கொண்டிருக்கிறது. இதுதான் இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை இப்பொழுது சீனாவின் முழுமையான ஆதிக்கம் உள்ள நாடாகவே மாறிவிட்டது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சரே அந்நாட்டுக்கு சென்று ராணுவ முகாம்களைப் பார்வையிடுகிற அளவுக்கு சீனாவுக்கு நட்பு நாடாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சீனாவுக்கு செக் வைக்கக் கூடிய இரண்டு இடங்களாக இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள் ஆப்கானிஸ்தானும், ஈரானும்தான். இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் அனைத்துமே இந்தியாவை கைவிட்டுவிட்ட நிலையில் இந்த நாடுகளையாவது தக்க வைத்துக் கொள்ளவே இந்தியா போராடி வருகிறது. இதற்காகவே ஆப்கானிஸ்தானில் பெருந்தொகையான நிதியை முதலீடு பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்து பெருமளவு தாதுப் பொருட்களை அகழாய்வு செய்து எடுத்தும் வருகிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டு எல்லைக்கு மிக அருகில் ஓமன் வளைகுடாவில் இருக்கக் கூடிய ஷா பஹார் துறைமுகத்தின் இரண்டாவது விரிவாக்கப் பணிகளில் இந்தியா ஈடுபடுத்திக் கொள்ள இருக்கிறது.
ஷா பஹார் துறைமுகத்தால் என்ன பயன்?
இந்த துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் எண்ணெய்வளமிக்க மத்திய ஆசிய நாடுகளை இந்தியா நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வரும் மேம்பாட்டு பணிகளுக்கும் உதவியாக இருக்கும். அத்துடன் பெரும்பாடுபட்டு பாகிஸ்தானில் சீனா விரிவாக்கம் செய்திருக்கும் கத்வார் துறைமுகமும் அருகேதான் இருக்கிறது. சீனாவுக்கு போகிற எண்ணெய் கப்பல்கள் ஷா பஹார் துறைமுகத்தை கடந்துதான் கத்வாருக்கு வந்து சேரும். அங்கிருந்து பலுசிஸ்தான் பகுதிகள் வழியே ரயில் மூலமாக எல்லையோர சீனாவின் மாகாணங்களுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.
சீனாவுடன் மோதல் உருவானால் ஷா பஹார் துறைமுகத்தில் இருந்து சீனாவின் எண்ணெய் போக்குவரத்தை தடுப்பது அல்லது தாக்குவது என்பது இந்தியாவுக்கு எளிதாக இருக்கும். இதேபோல் தற்போது ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் மட்டுப்பட்ட நிலையில் இருந்தாலும் எதிர்காலத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு ஷா பஹார் துறைமுகம் உதவியாக இருக்கும்.
துறைமுகத்தை பார்வையிட்ட இந்திய அதிகாரிகள்
தற்போது ஈரான் சென்றிருக்கும் இந்திய அதிகாரிகள் ஷா பஹார் துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய அதிகாரிகள், ஷா பஹார் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகளை ஈரான் செய்து முடித்துள்ளது. இரண்டாவது கட்ட விரிவாக்கப் பணியில் இந்தியா தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் என்று கூறியுள்ளனர்.
ஆப்கான் - ஈரான் ரயில் பாதை அமைக்கும் இந்தியா
இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாமியான் மாகாணத்திலிருந்து ஷா பஹார் துறைமுகத்துக்கு 900 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் இந்தியா நிறைவேற்றித்தர இருக்கிறது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் இரும்புத் தாதுக்களை எளிதாக இந்தியாவுக்கு கொண்டுவர முடியும் என்பதுதான் இந்தியாவின் திட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக