வியாழன், டிசம்பர் 19, 2013

வகுப்புக் கலவர தடுப்பு மசோதா: அமைச்சரவை அங்கீகாரம்! - பாராளுமன்றத்தில் தாக்கல்

வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய பிரிவுகளை நீக்கிவிட்டு அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பா.ஜ.க உள்ளிட்ட சில எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே இம்மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இன்று மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
மசோதாவின் வரைவில் கலவரத்திற்கான பொறுப்பு பெரும்பான்மை சமூகத்திற்கு என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், எதிர்ப்பை தொடர்ந்து வகுப்புக் கலவரத்தில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் சம பொறுப்புள்ளதாக திருத்தப்பட்டுள்ளது.கலவரம் நடந்தால் அதில் மத்திய அரசு நேரடியாக தலையிடலாம் என்ற பிரிவும் நீக்கப்பட்டுள்ளது. மாநில அரசு தேவைப்பட்டால் மத்திய அரசுப் படையை கேட்கலாம். வரைவு மசோதாவில் மத்திய அரசு, மாநில அரசை கலந்தோலோசிக்காமலேயே கலவரத்தை அடக்கலாம் என்ற பிரிவும் இடம் பெற்றிருந்தது.பா.ஜ.கவை தவிர மே.வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை இம்மசோதா பாதிக்காது என்றும், மாநில அரசுகள் கோரினால் மட்டுமே ஒருங்கிணைந்து மத்திய அரசு செயல்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தியாவின் சமூக நல்லிணக்கத்திற்கு இம்மசோதா பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பாராளுமன்றத்தில் இம்மசோதா வரும்போது என்னை விலைக் கொடுத்தேனும் அதனை எதிர்ப்போம் என்றும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வகுப்பு கலவர தடுப்பு மசோதாவிற்கு எதிராக குஜராத் முத்ல்வர் மோடி சுசில்குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், பாராளுமன்ற நடப்பு கூட்டத் தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்படும், மோடி செய்யவேண்டியதை செய்துகொள்ளட்டும் என்று அக்கடிதத்திற்கு பதிலளிக்கையில் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக