செவ்வாய், நவம்பர் 15, 2011

மண்ணை மயானமாக்கும் மது

மீண்டும் ஒரு தடவை அவரை ரயில் வண்டியில் கண்டபொழுது அவர் என்னைப் பார்ட்து சிரிக்க முயன்றார். காய்ந்த உதடுகள், வெளிறிப்போன முகம், குழி விழுந்த கண்கள்.... என்று ஆளின் கோலமே மாறிப்போயிருந்தது.

குடித்துக்குடித்து குடும்பத்தைத் தொலைத்தவர். அனைத்தையும் இழந்தவர். குடியை மறக்க வைக்கும் மறுவாழ்வு மையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரின் மனைவியும் வேறொரு ஆளும் இருந்தனர்.

கண்ணியமான அரசு வேலையில் இருந்தார். ஓர் அலுவலக மாலை நேர விருந்து நிகழ்ச்சியில் அனைவராலும் நிர்பந்திக்கப்பட்டு குடிக்கை வைக்கப்பட்டார். பின்னர் விருந்து நிகழ்ச்சிகளில் குடிக்க ஆரம்பித்தார். நாளடைவில் அதுவே பழக்கமாகி எந்த வகையிலும் அதனை விட முடியாத அளவுக்கு குடிக்கு அடிமையானார். இதில் அவர் பலவற்றை இழந்தார். போதையில் பேதையாகிப்போன அவர் வீட்டிலுள்ள விலைமதிப்புள்ள பொருட்களை விற்க ஆரம்பித்தார்.

மூத்த மகளை அவளின்  கணவன் கைக்கழுவி விட்டு போய்விட்டான். இளைய மகளுக்கு நல்ல நல்ல மாப்பிள்ளைகள் வந்தும் ஒன்றும் கைக்கூடவில்லை. இறுதியில் தன் அன்பு மகனும் தன்னைப்போலவே குடிக்க ஆரம்பித்துள்ளான் என்ற அதிர்ச்சிகரமான செய்தியும்  அவரை வந்தடைந்தது. இருந்தாலும் குடியை விட முடியவில்லை. போதையில்லாமல் ஒரு மணி நேரம் கூட அவரால் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அரசு வேலையில் மூன்று தடவை தற்காலிகப் பணி நிறுத்த உத்தரவுகள் கிடைத்தன. நாடி நரம்புகள் தளர்ந்தன. கை கால்கள் பலத்தை இழந்தன. அடுத்த ஆள் உதவியில்லாமல் நடக்க முடியாத நிலை இருந்தும் குடியை விடவில்லை. நிறைய ஆலோசனைகள் கொடுத்தும், மருந்துகள் உட்கொண்டும்  பலன் ஏற்படாததால் தூரத்திலிருக்கும் குடியை மறக்க வைக்கும் மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு செல்லலாம் என்று குடும்பத்தார் முடிவெடுத்தார்கள். ரயில் நிலையத்தில் அவர் இறங்க பட்ட பாடு பார்க்க சகிக்க முடியாதது.

சமூகத்தில் மதுப் பழக்கம் மிக அதிகமாகி வருவதையே சமீபத்தில் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த வருட புத்தாண்டு தினத்திற்கு முந்தய தினம் கேரளாவில் மட்டும் 32.5 கோடி ரூபாய்க்கு மது விற்றிருக்கிறது. டிசம்பர் மாதம் முழுவதும் கணக்கெடுத்தால் அது 600 கோடியைத் தாண்டும். இது அரசால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்கு.

அது அல்லாமல் ஹோட்டல்களிலும், கிராமப் புறங்களிலுள்ள சாராயத் கடைகளிலும் விற்கப்படும் மதுவைக் கணக்கெடுத்தால் இதே போன்றோ, அல்லது அதற்கு அதிகமாகவோ வரும். ஒவ்வொரு வருடமும் மது விற்பனை 30% அதிகரித்து வருகிறதாம். அரசின் வருமானத்தில் கணிசமான பகுதி மது விற்பனையின் மூலம் கிடைக்கின்றது. இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து பலரும் எச்சரித்தாலும் யார் காதிலும் விழுந்த மாதிரி தெரியவில்லை.

மதுப்பழக்கத்தை கடுமையாகக் கண்டித்த மார்க்கம் இஸ்லாம். ஆனால் முஸ்லிம்கல் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் மது விற்பனை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். சமுதாயத் தலைவர்களும், பிரமுகர்களும், அறிஞர்களும் கண் திறக்க வேண்டிய சமயம் இது. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் நிலைமை மிகவும் மோசமாகிப் போகும்.

மதுப்பழக்கம் உடையவரின் மனதிலிருந்து இறை நினைவும், இறைபக்தியும் மறைந்து போகும். ஷைத்தானின் தீய தூண்டுதல்களிலேயே மனம் லயிக்கும். ஒர் இறைவிசுவாசிக்கும், இறை நினைவில் உள்ளவருக்கும் மதுப்பழக்கம் இருக்கவே முடியாது என்று அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். மதுப் பழக்கம், மது உற்பத்தி, வினியோகம், அதிலிருந்து கிடைக்கும் லாபம், இன்னும் அது சம்பந்தமான அனைத்தும் இம்மையிலும், மறுமையிலும் கடுமையான தண்டனைக்குத் தகுதியுள்ள பாவங்களாகும்.

அதனால் தான் முழு அளவில் மது விலக்கு ஏற்படுத்திக்கொண்டு திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகின்றது.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக்கொண்டும், சூதாட்த்தைக்கொண்டும், உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்து விடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(திருக்குர் ஆன் 5:90-91)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக