ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

இளந்தாமரை மாநாடு: திருச்சியில் பாஜகவுக்கு சவால் விடும் ம.க.இ.க.

திருச்சி: வருகிற 26ஆம் தியதி திருச்சியில் பாஜகவால் இளந்தாமரை மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இம்மாநாட்டை தடுத்து, கலவரத்தை தூண்டும் வகையில் நகர் முழுவதும் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்களை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் கலை இலக்கியக் கழக இணைப் பொதுச்செயலர் காளியப்பன், பாஜகவினருக்கு தைரியமிருந்தால், எங்களது சுவ்ரொட்டிகள் / துண்டு பிரசுரத்தில் இருக்கும் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மறுத்து அறிக்கை விடட்டும். அதற்கு திராணி இல்லாமல், காவல்துறையினரிடம் பொய் புகார் கொடுத்து எங்களது பிரச்சாரத்தை தடுக்க மன்றாடுகின்றனர் என்று கூறியவர், இது தொடர்பாக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
மோடி எதிர்ப்பு இயக்கத்துக்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய 
கலைக்குழு தயாரித்து, மக்களிடையே பாடி வரும் பாடலின் ஒலிப்பதிவு...
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:

குஜராத்தில் 2,000 முஸ்லிம்களைக் கொன்று குவித்த இனப் படுகொலைக் குற்றவாளி நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து திருச்சி நகரம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நாங்கள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறோம். 22.9.2013 அன்று மாலை திருச்சியில் நடைபெறவிருக்கும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், ம.க.இ.க வின் பொதுச்செயலர் மருதையன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு ஆகியோர் உரையாற்றுகின்றனர். ம.க.இ.க கலைக்குழுவினரின் மதவெறி எதிர்ப்பு கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
பெரியார் பிறந்த மண்ணான தமிழகத்தில் மதவெறி வளர அனுமதிக்க கூடாது என்ற எமது பிரச்சாரத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதால், பா.ஜ.க வினர் பீதியடைந்திருக்கின்றனர். நாங்கள் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை விட்டிருக்கிறார். கலவரம் நடத்தி, அப்பாவி மக்களின் ரத்தத்தில் வளர்க்கப்பட்ட கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்பதனை நாடறியும்.
இன்று கூட உ.பி யில் கலவரத்தை தூண்டிய பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார். குஜராத் படுகொலையை முன் நின்று நடத்திய மோடி அரசின் அமைச்சர் மாயா கோத்னானி 28 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். போலி மோதல் கொலைகளை திட்டமிட்டுக் கொடுத்த மோடியின் அமைச்சர் அமித் ஷா ஜாமீனில் இருக்கிறார்.
இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மோடி அரசின் 32 உயர் காவல்துறை அதிகாரிகள் கொலைக் குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார்கள். மோடி அரசின் ஒப்புதலுடன் தான் எல்லாக் கொலைகளும் செய்யப்பட்டன என்று சிறையில் இருக்கும் டிஐஜி வன்சாரா உலகத்துக்கே அறிவித்திருக்கிறார். மோடியின் மீதான வழக்கே விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் “நீரோ” என்று சாடப்பட்ட மோடியை “ஹீரோ” என்று சித்தரிக்கிறது பாஜக.
குஜராத்தில் பாலும் தேனும் ஓடுவது போல பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. கல்வி, மருத்துவம், தாய் சேய் நலம், குறைந்த பட்ச ஊதியம் போன்ற பல்வேறு துறைகளில் தமிழகத்தை விடவும் மிகவும் பின்தங்கியிருக்கிறது குஜராத் மாநிலம் என்பதே உண்மை. இந்தியாவிலேயே 65% ரேசன் பொருட்கள் திருடு போகும் மாநிலம் குஜராத். இந்தியாவிலேயே தொழிலாளர்களுடைய குறைந்த பட்ச ஊதியம் குறைவான இடம் குஜராத் மாநிலம் தான்.
“வாடகைத்தாய்” என்ற பெயரில் ஏழைப் பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட்டு வெள்ளைக்காரனுக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்து, அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் மாநிலமும் குஜராத் தான். தொழில் முதலீட்டிலும் தமிழகத்தை காட்டிலும் குஜராத் பின்தங்கியிருக்கிறது என்று சமீபத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. இது போன்ற பல உண்மைகளை எமது பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தவிருக்கிறோம்.
தைரியமிருந்தால் பாஜகவினர் இவற்றை ஆதாரங்களுடன் மறுத்து அறிக்கை விடட்டும். அதற்குத் திராணி இல்லாமல், பொய்ப்புகார் கொடுத்து எங்கள் பிரச்சாரத்தை தடுக்குமாறு காவல்துறையிடம் மன்றாடுகின்றனர். “ஒரே மேடையில் விவாதத்துக்குத் தயாரா?” என்று பிரதமருக்கு சவால் விடுகிறார் மோடி. பாஜகவின் தமிழகத் தலைவரோ எங்கள் பிரச்சாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலேயே மாற்றுக் கருத்தை நசுக்க முனைகிறார்கள், மோடி பக்தர்கள். மோடி வெற்றி பெற்றால் அது ஒரு பாசிஸ்டு ஆட்சியாகத் தான் இருக்கும் என்பதனை திரு.பொன் இராதாகிருஷ்ணனின் அறிக்கையிலிருந்தே புரிந்து கொள்ள முடியவில்லையா?
இவண்,
காளியப்பன்,
இணைப் பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு.

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்
_____________________________________
சிறப்புரை : தோழர். மருதையன்,
மாநில பொதுச்செயலர்,
ம.க.இ.க, தமிழ்நாடு.
செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர், திருச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக