திங்கள், செப்டம்பர் 30, 2013

உயிரோடிருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏ. இறந்ததாக சான்றிதழ்! -மதுரை மாநகராட்சியின் அவலம்!

மதுரை: உயிரோடு இருக்கும் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இறந்து விட்டதாக மதுரை மாநகராட்சி சார்பில் இறப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ள நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது, இறப்பு, பிறப்பு சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி இறந்துவிட்டதாக கடந்த மாதம் 23 ஆம் தேதி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதே போல் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை 2006 ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக கடந்த மாதம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் கணினி பிரிவில் டிஜிட்டல் கையெழுத்தினை தவறாக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரோடு இருக்கும் அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக