வெள்ளி, செப்டம்பர் 13, 2013

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு!

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வன்முறை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 16 ம் தேதி டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து, வீசி எறியப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி, வெட்கி தலைகுனியவும் வைத்தது.

இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக் ஷய் தாக்கூர் மற்றும் சிறார் குற்றவாளி ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறார் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக் ஷய் தாக்கூர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10 ம் தேதி தீர்ப்பு வழங்கியது. 11 ம் தேதி தண்டனை குறித்த இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குக் தண்டனை விதிக்க வேண்டும் என்றும், அவர்கள் செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணை காட்ட வழியே இல்லை என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் கொடுமையான குற்றம் புரிந்த இக்குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து டெல்லி முழுவதும் இந்த தீர்ப்பை வரவேற்று வெடிவெடித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக