செவ்வாய், நவம்பர் 22, 2011

லைசென்ஸ் ரத்து: குடிபோதையில் விமானம் ஓட்டினால் 1 வருடம் ஜெயில் தண்டனை


நாட்டில் சமீபகாலமாக விமான விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இவற்றில் பல உயிர்ப்பலிகளை வாங்கியுள்ளன. சிலவற்றில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்த போது பெரும்பாலான விபத்துக்கள் விமானியின் தவறால் நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
 
குறிப்பாக விமானிகள் குடித்துவிட்டு விமானத்தை ஓட்டியபோதுதான் அதிகளவில் விபத்துக்கள் நடந்துள்ளன. எனவே விமான விபத்துக்களை தவிர்க்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. குடிபோதையில் விமானத்தை ஓட்டும் விமானிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக விமான இயக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி பணிக்கு வரும் விமானிகள் 12 மணி நேரத்துக்கு முன்பே மது அருந்தி இருக்க கூடாது. பணிக்கு வரும் விமானிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆல்கஹால் சோதனை மேற்கொள்ளப்படும். குடிபோதையில் இருப்பது தெரியவந்தால் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். அதுபோல பணி நேரம் முடியும் வரை மதுவை தொடக்கூடாது.
 
மீறி எந்த விமானியாவது விமானத்தில் மது வாங்கி குடித்துவிட்டு, விமானத்தை ஓட்டினால் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். விமான நிலைய சோதனை அல்லது விமானத்தை விட்டு இறங்கும் போது நடத்தப்படும் “ஆல்கஹால்” சோதனையில் பிடிபடும் விமானிகளின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
 
இந்த புதிய விதிமுறை விமானிகளுக்கு மட்டுமின்றி விமான ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். பாதுகாப்பு விஷயத்தில் சகிப்பு தன்மைக்கு இடம் கிடையாது என்று விமான அமைச்சகம் எச்சரித்துள்ளது. பைலட் லைசென்ஸை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் நபர்கள் அதன் பிறகு இந்தியாவில் எங்கும், எந்த நிறுவனத்திலும் விமானம் ஓட்ட முடியாது. இந்த புதிய சட்ட திருத்தத்துக்கு விமானிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக