திங்கள், நவம்பர் 21, 2011

கல்லறையை திறந்த வழக்கில் டீஸ்டா ஸெடல்வாட் முக்கிய குற்றவாளி – மோடி அரசு

imagesCAH2LXWF
புதுடெல்லி:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் கல்லறையை திறந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் என மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது.வழக்கில் விசாரணையை சந்தித்துவரும் டீஸ்டாவும், அவரது உதவியாளரான ரஈஸ் கான் பத்தான் ஆகியோர் பந்தவாடாவுக்கு அருகே அனுமதியில்லாமல் கல்லறையை திறந்த சம்பவம் திட்டமிட்டு செயல்படுத்தியது என மோடி அரசு கூறியுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த நோட்டீஸுக்கு பதிலாக பிரமாணப் பத்திரத்தை குஜராத் அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் டீஸ்டா மீதான க்ரிமினல் நடவடிக்கைகளுக்கு கடந்த ஜூலை 29-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இதர நபர்கள் நிரபராதிகள் ஆவர் எனவும், டீஸ்டாவின் நிர்பந்தத்தின் காரணமாகவே அவர்கள் இக்குற்றத்தை செய்துள்ளதாகவும் குஜராத் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் மீண்டும் விசாரணை வருகிற வியாழக்கிழமை நடைபெறுகிறது. கல்லறையை திறக்க டீஸ்டா தங்களை தூண்டினார் என வாக்குமூலம் அளித்துள்ள ரஈஸ்கான் பத்தான், குலாம் கராதி, சிக்கந்தர் அப்பாஸ், குதுப் ஷா திவான், ஜாபிர் முஹம்மது ஆகியோரும் இவ்வழக்கில் குற்றவாளிகள் என மோடி அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக