புதன், நவம்பர் 30, 2011

சமூக நீதி மாநாடு தரும் செய்தி

delhi SJC
சமூக நீதியையும்,சம உரிமைகளையும் தேடி இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்டத்தின் மகத்தான வளர்ச்சிதான் கடந்த 26,27 தினங்களில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு. இந்தியாவின் நாலா புறங்களிலும் இருந்து வந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்த மாநாட்டின் இரண்டாவது நாள், தேசத்தின் தலைநகரையே
ஆச்சரியப்படவைக்கும் வகையில் பெரும் சக்தி பிரகடனத்தின் சாட்சியாக மாறியது.
விசாலமான ராம் லீலா மைதானத்தில் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் கூட்டம், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்திப்பிடிக்கும் சக்திப் பிரகடனமாக காட்சி அளித்தது. இந்த பெரும் மக்கள் திரளின் உள்ளங்களில் ஊன்றியிருக்கும் உணர்வுகளை புறக்கணித்துவிட்டு இந்தியாவின் எந்த ஜனநாயக அரசாலும் ஆட்சிக்கட்டிலில் தொடர்ந்து அமர முடியாது. அவ்வகையில் சிறுபான்மை-ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தேசிய முன்னேற்றத்திற்கான உறுதிமிக்க நம்பிக்கையை அளிக்கும் அனுபவமாக ராம்லீலா மைதானம் மாறியது எனலாம்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளைத் தான், இரண்டு தினங்களாக நடந்த மாநாட்டின் விவாதங்களும், தீர்மானங்களும் தேசத்தின் முன்னால் வைத்தன. நீதிக்கான போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகங்கள் கையோடு கைக்கோர்த்து ஒன்றிணைந்து பங்கேற்கவேண்டும் என்ற செய்தி அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அத்தகையதொரு அகண்ட கருத்தொற்றுமைக்கு மாநாடு களத்தை உருவாக்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மாநாட்டின் இறுதியாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களின் உரைகள் அமைந்திருந்தன.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், அம்பேத்கர் சமாஜ் கட்சியின் தலைவர் பாய் தேஜ் சிங், அகில இந்திய மஜ்லிஸே முஷாவரத்தின் தலைவர் செய்யத் ஷஹாபுத்தீன், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஃபதேஹ்பூர் இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத், சுரேஷ் கைர்னார் உள்ளிட்ட சமூக-மத தலைவர்கள் ஆற்றிய உரைகள் நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்திருந்தன. நீதியில் உறுதிப்பூண்ட புதியதொரு இந்தியாவை கட்டமைப்பதற்கான வலுவான அழைப்பாக மாநாடு அமைந்ததுதான் அதன் மாபெரும் வெற்றியாகும்.
மாநாட்டின் இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட ‘டெல்லி பிரகடனம்’, முன்பு கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ‘தேசிய அரசியல் மாநாட்டில்’ அங்கீகரிக்கப்பட்ட பிரகடனத்தின் செயல்ரீதியான வளர்ச்சியின் காலடி சுவடாக அமைந்தது.
முக்கிய தேசிய அரசியல் கட்சிகளும், இடதுசாரிகளும் கூட இன்று அங்கீகரித்து நடைமுறைப்படுத்தும் உலகமயமாக்கல்-தனியார்மயமாக்கல் வளர்ச்சிக் கொள்கைகளின் பொய் முகமூடியை தோலுரித்து காட்டிய டெல்லி பிரகடனம், ‘அனைத்து மக்களும் நலமாக வாழும் தேசம்’ என்ற கொள்கைதான் இந்தியா போன்ற வறுமையில் உழலும் நாட்டிற்கு தேவை என்பதை பிரகடனப்படுத்தியது.
சமூக நீதியை நிலை நாட்டுவதற்கு தேவையான அரசியல் கொள்கைகளும், தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் உள்பட மிகவும் இன்றியமையாத ஏராளமான விவகாரங்களில் சரியான, லட்சிய உணர்வுமிக்க அணுகுமுறைகளை மாநாடு வெளியிட்டது. வரும் ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மை-ஒடுக்கப்பட்ட சமூகங்களை சக்திப்படுத்துவதற்கு முன்மாதிரியாக அமைந்த இம்மாநாடு எதிர்காலத்திற்கான ஒரு மகத்தான வழிகாட்டியாகும்.
அ.செய்யதுஅலீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக