புதன், நவம்பர் 30, 2011

வளர்த்த கடா மாரில் பாயும் வினோதம்! பாஜகவுக்கு செக் வைக்கும் ஸ்ரீராமுலு!

பாஜகவின் சார்பில் பெல்லாரி தொகுதியில் வெற்றி பெற்று எடியூரப்பாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்  ஸ்ரீராமுலு. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் எடியூரப்பா முதல்வர் பதவியை இழந்த பிறகு புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற சதானந்த கௌடா தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீ ராமுலு மற்றும் ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை. அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் தம்முடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ஸ்ரீராமுலு பாஜகவில் இருந்தும் விலகினார். ஸ்ரீ ராமுலு ராஜினாமா செய்ததை அடுத்து பெல்லாரி தொகுதிக்கு நாளை நவம்பர் 30 அன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இடைத் தேர்தலில் ரெட்டி சகோதரர்களின் ஆதரவுடன் சுயேட்சையாக களம் இறங்குகிறார் ஸ்ரீராமுலு. 

பாஜக சார்பில் காதிலிங்கப்பாவும், காங்கிரஸ் சார்பில் ராம பிரசாத்தும் போட்டியிடுகின்றனர். ஸ்ரீ ராமுலுவை தோற்கடித்து வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாஜக. பெல்லாரி தங்களின் கோட்டை என்பதை உணர்த்த ஸ்ரீராமுலுவை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ரெட்டி சகோதரர்கள். இதன் காரணமாக ஸ்ரீ ராமுலு சார்பாக மக்களுக்கு இங்கு தாராளமாக பணம் வழங்கப் படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. 

கடந்த முறை சுமார் 25700  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்ரீ ராமுலு இம்முறை வெற்றி பெற்று பாஜகவுக்கு செக் வைப்பாரா அல்லது ரெட்டி சகோதரர்களின் கோட்டையை தகர்த்து எறிந்து காங்கிரஸ் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவாரா என்பது டிசம்பர் 3 அன்று தெரிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக