வியாழன், நவம்பர் 24, 2011

"டிவி'க்களை இயக்கும் டிரைவர்கள்: பயணிகளின் உயிருக்கு உலை

தமிழகத்தில் அரசு, தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள, "டிவி' மற்றும், டி.வி.டி., பிளேயர்களை டிரைவர்களே இயக்குவதால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன், பஸ்களில், "டிவி' ஒளிபரப்புக்குத் தடை விதிக்க, அரசு முன்வர வேண்டும்.தனியார் பஸ்களின் சொகுசுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், "டிவி' பொருத்தி ஒளிபரப்பு செய்ய, 2010ல், தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது.
கோட்டங்களுக்கு ஏற்ப, ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் டெண்டர் எடுத்து, ஒவ்வொரு பஸ்சிலும், "டிவி', டி.வி.டி., பிளேயரை தின வாடகை அடிப்படையில் பொருத்தினர்.தமிழகத்தில், 2008 ஏப்ரலில், 17 ஆயிரத்து 897 அரசு பஸ்களில், 950 விரைவு பஸ்களும் இருந்தன. தற்போது இந்த பஸ்களின் எண்ணிக்கை, 21 ஆயிரத்து 169ஆக உயர்ந்துள்ளது. மொத்தம், 18 ஆயிரத்து 847 பஸ்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் மூலம், "டிவி' மற்றும், டி.வி.டி., பிளேயர் பொருத்தப்பட்டது.

அதற்கான ஒரு நாள் வாடகை, 70 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பஸ்சுக்கு மாதம், 2,100 ரூபாய் தனியாருக்கு செலுத்தப்பட்டது. அதன்படி, ஒரு ஆண்டுக்கு, ஒரு பஸ்சுக்கு, 25 ஆயிரத்து 200 ரூபாய் செலவிடப்பட்டது.ஒரு பஸ்சின் "டிவி' வாடகைக்கான கணக்கை, அனைத்து பஸ்களுக்கும் சேர்த்து, ஆண்டுக்கு கணக்கிட்டால், 47 கோடியே 59 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாய் வந்தது. அதிர்ச்சி தரும் விஷயமாக, இந்த தொகை முழுவதும், தனியார் ஒப்பந்ததாரருக்குப் போய் சேர்ந்தது. போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியாருக்கான,கட்டணத்தைச் செலுத்தாததால், "டிவி' ஒளிபரப்பு, சில கோட்ட பஸ்களில் மட்டும் இல்லை.கடந்த ஆட்சிக் காலத்தில் பஸ்களில், "டிவி' ஒளிபரப்பு செயற்கைக் கோள் உதவியுடன், பூம், "டிவி' எனும் பெயரில் ஒளிபரப்பு துவக்கப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மட்டுமின்றி, பிற போக்குவரத்துக் கழக பஸ்களிலும் இந்த ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஒளிபரப்பு, பயணிகளை கவரும் வகையில் இல்லாததால் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், பயணிகளைக் கவர்வதற்காக கோவை, சேலம், கும்பகோணம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய கோட்ட அரசு பஸ்களிலும், இந்த மாவட்டங்களில் இயங்கும் தனியார் பஸ்களிலும், டி.வி.டி., பிளேயர் உதவியுடன், "டிவி'க்கள் இயங்கி வருகின்றன."டிவி'க்கள் டிரைவர்களின் எதிரில் உள்ளதால், டிரைவர்களே ரிமோட் உதவியுடன் இயக்கி வருகின்றனர். இதனால், டிரைவர்களின் கவனம் சிதைந்து, விபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடந்த விபத்தில், பஸ்சை ஓட்டிய டிரைவர், ரிமோட்டை பயன்படுத்தி, "டிவி' இயக்கியதால் தான் விபத்து நடந்தது என, பயணிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் தமிழக அரசு, 10 ஆயிரம் பஸ்களில், "டிவி' ஒளிபரப்பு செய்ய டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 1.2 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணத்துக்காக, பயணிகளின் உயிருக்கு உலை வைக்கக் கூடிய நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளதாக, பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, இந்த டெண்டரை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. பஸ்களில், "டிவி' ஒளிபரப்புக்கு முற்றிலும் தடை விதிக்க, அரசு முன்வர வேண்டும்..காற்றில் பறக்கும் அரசு உத்தரவு:கடந்த, தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மொபைல் போன்களை பயன்படுத்தி வந்தனர். 

இதனால், டிரைவர்களின் கவனம் சிதறி விபத்துகள் அதிகரித்தன.இதை அறிந்த அரசு, தனியார் பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்தது. 

இந்த தடை விதிக்கப்பட்ட, இரண்டு மாதம் வரை தான், அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு, டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன் பின், தற்போது வரை, அந்த உத்தரவை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், தற்போது அரசு, தனியார் பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் மொபைல் போன்களை, தங்கு தடையின்றி பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு காற்றில் பறக்கும் நிலையில், அதை மீண்டும் உயிர்ப்பித்து அமல்படுத்த வேண்டு
ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக