செவ்வாய், ஜனவரி 10, 2012

பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார் !


பங்கி ஜம்ப் விளையாட்டில் கயிறு அறுந்தது: 364 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் உயிர் தப்பினார்ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் எரின் லாங்வொர்தி (22). புத்தாண்டை கொண்டாட ஆப்பிரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜிம்பாப்வே சென்ற அவர் காலில் கயிற்றை கட்டிக் கொண்டு உயரத்தில் இருந்தபடி தலைகீழாக குதிக்கும் பங்கி ஜம்ப் என்ற விளையாட்டில் பங்கேற்றார்.  
 அங்குள்ள ஷாம்பேசி ஆற்றில் உள்ள விக்டோரியா அருவி பாலத்தின் மீது நின்றபடி 364 அடி உயரத்தில் பங்கி ஜம்ப் விளையாடினார். காலில் கயிற்றை கட்டி அவர் ஆற்றுக்குள் குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விட்டது. இதனால் அவர் ஷாம்பேசி ஆற்றுக்குள் 364 அடி ஆழத்தில் விழுந்தார்.  
 
இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்ததால் அவர் இறந்திருப்பார் என நினைத்தனர். ஏனெனில் அந்த ஆற்றில் முதலைகள் அதிகம் உள்ளன. ஆனால் யாரும் எதிர்பாராதபடி அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது உடலில் லேசான காயங்களே இருந்தன.
 
ஆற்றுக்குள் விழுந்த அவர் மன தைரியத்துடன் நீந்தி கரை ஏறினார். பின்னர் அவர் தென்ஆப்பிரிக்கா சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  
 
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர் நான் உயிர் பிழைத்தது உண்மையிலேயே ஒரு அதிசயம்தான் என்றார்.
 
ஜிம்பாப்வேயில் பங்கி ஜம்ப் புகழ்பெற்றது. ஆண்டு தோறும் 50 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதுபோன்று கயிறு அறுந்த சம்பவம் தற்போதுதான் முதன்முதலாக நடந்துள்ளது.
 
எனவே இனி இதுபோன்று நடக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜிம்பாப்வே சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக