செவ்வாய், ஜனவரி 10, 2012

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம் !


உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி உள்ளிட்ட 5 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வாசுகி, சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் கூறியுள்ளதாவது, 

கடந்த 2001ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதன்பிறகு டீசல் விலை 137 சதவிகிதமும், உதிரி பாகங்களின் விலை 180 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 6,154 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகாவில் அதிகம்

இந்த இடைப்பட்ட காலத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலங்களை விட குறைவுதான். ஆகவே தவிர்க்க முடியாமல் உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் தமிழ்நாடு அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக