வியாழன், ஜூன் 05, 2014

காதலனை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி காதல் மனைவி கடத்தல் : போலீஸ் விசாரணை


சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரது மகன் பாசில் (20). இதே போல் குரங்குசாவடி பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவரது மகள் பிரதீபா (19). இவர்கள் 2 பேரும் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

பாசில்–பிரதீபா இடையே காதல் மலர்ந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் பிரதீபாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பிரதீபா முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை ஆயிஷா என்று மாற்றிகொண்டார்.பாசில் வீட்டில் திருமணத்தை ஏற்று கொண்டதையடுத்து புதுமண ஜோடியினர் அம்மாப்பேட்டையில் தங்கியிருந்தனர். திருமணத்துக்குப்பின் பிரதீபாவின் பெற்றோர், உறவினர் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாசிலின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பிரதீபாவின் பெற்றோர் தங்களிடம் சொத்தில் பங்கு கேட்டு வரக்கூடாது என்று கூறிவிட்டனர். எனவே அவர்கள் தயாரித்து வைத்துள்ள பத்திரத்தில் கையெழுத்து போடுவதற்காக மேச்சேரி பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வரும்படி அழைத்து உள்ளார்.

இதையடுத்து பாசிலும், பிரதீபாவும் நேற்று மேச்சேரி நோக்கி சென்றனர். அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் பாசிலை தாக்கிவிட்டு பிரதீபாவை கடத்தி சென்றனர். மேலும் பாசிலை ஓமலூர் சுங்கசாவடி அருகே கொண்டு வந்த கும்பல் அங்கிருந்த ஒரு மரம் அறுக்கும் ஆலையில் வைத்து இரும்பு கம்பியாலும், தடியாலும் தாக்கினர். அவரது செல்போனையும் உடைத்து வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் மாணவர் பாசில் மயங்கி விழுந்தார். நீண்ட நேரத்துக்கு பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த அவர் பஸ் ஏறி சேலம் வந்தார். பின்னர் அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் அவர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக