சனி, ஜூன் 07, 2014

போலீஸ்காரர் வெறிச்செயல்: வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் பெண் பலி

ஒருதலை காதலில் ஏற்பட்ட விபரீத விளைவாக வீட்டுக்குள் புகுந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த இளம் பெண்ணின் தாயார் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் பருன் மஜும்தர். கொல்கத்தா நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை செய்து வரும் இவர், நாடியா மாவட்டத்தில் உள்ள பிபுல்பரியா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். 

தினமும் அவர் கல்லூரிக்கு சென்று வரும் வழியில் விழி வைத்து, நீண்ட நாட்களாக ஒற்றைக் காலில் நின்றும் அந்த மாணவி பருன் மஜும்தரின் காதல் வலையில் சிக்கவில்லை. சமீபத்தில், அந்த பெண்ணை வழிமறித்து, தனது  காதலை வெளிப்படுத்திய போது அவரது காதலை நிராகரித்து விட்டார். 

ஆசைப்பட்டது கிடைக்கவில்லையே... என்ற ஆத்திரமும் அவமானமும் ஒருசேர, மிருகமாக மாறிப் போன பருன் மஜும்தர் நேற்றிரவு அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். 

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை உருவி, அந்த இளம்பெண்ணை நோக்கி வெறித்தனமாக சுட்டார். மகளை காப்பாற்ற வந்த தாய் மீதும் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர். 

சற்றும் அலட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பருன் மஜும்தரை பிடிக்க அப்பகுதியில் வசிப்பவர்கள் முயற்சித்த போது, துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே தப்பியோடி விட்டார். மயங்கிக் இடந்த இருவரையும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்ற போது மாணவியின் தாயார் இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். 

தீவிர கண்காணிப்பு பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஹன்ஸ்காலி பகுதி போலீசார், தலைமறைவாக இருக்கும் பருன் மஜும்தரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக