வியாழன், மார்ச் 21, 2013

நாளைய பட்ஜெட்டிற்கான SDPI கட்சியின் கோரிக்கைகள் !



2013-2014 க்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் சூழ்நிலையில் கடந்த வாரம் SDPI ன் நிர்வாகிகள் தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் அவர்களை சந்தித்து SDPI ன் கோரிக்கைகளை அளித்தனர் .
அது போன்றே தமிழக முதலைமைச்சர் ,தலைமை செயலாளர் ஆகியோருக்கு SDPI கட்சியின் சார்பில் கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர் .



நாளை தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டிற்கு SDPI கட்சி கோரி இருக்கும் கோரிக்கைகள் பின்வருமாறு



வரும் தமிழக நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்க, அதற்காக நிதி ஒதுக்க திட்டமிட்டு இருப்பீர்கள்.
அத்துடன் கீழ்கண்ட பொதுமக்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன் பயக்கும் திட்டங்களையும் சேர்த்து அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


1. சூரிய ஒளி மின்சாரத்தை தங்களின் வீடுகளில் அமைப்பதற்கான பொருட்செலவு அதிகமாக உள்ளதால் மாநிய தொகையை அதிகரிப்பதோடு அதற்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


2. பல்வேறு மாநிலங்களில் ஹஜ்கமிட்டிக்கு சொந்த கட்டிடம் உள்ளது ஆனால் தமிழகத்தில் சிறிய வாடகை கட்டிடத்தில்தான் இயங்கிவருகிறது. சென்னையில் ஹஜ் கமிட்டி அலுவலகம் விரிவான ஏற்பாடுகளுடன் சொந்தமாக கட்டுவதற்கு மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். இது ஹஜ் பயணிகளுக்கு பயிற்சி அளிக்கவும், தங்கிச்செல்லவும் மற்றும் பல்வேறுவகைகளில் பயன்படும்.


3. முஸ்லிம் இளைஞர்கள் கல்வி, சுயவேலைவாய்ப்பை விட்டு விட்டு குறைந்த சம்பளத்திற்காக வெளிநாடு செல்லும் அவலம் அதிகரித்து வருகிறது. எனவே முஸ்லிம் இளைஞர்களின் கல்வி சுய தொழிலுக்கான கடனுதவியை அதிகரிப்பதோடு வட்டியை காரணம் காட்டி முஸ்லிம்கள் இதை வாங்க ஆர்வம் காட்டாத நிலை இருப்பதால் வட்டி தொகையை தமிழக அரசு மானியமாக வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.


4. உலமா நலவாரியம் சிறப்பாக செயல்படும் பொருட்டு அதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உலமா நலவாரியத்தின் பயணாளிகளை அதிகப்படுத்த வேண்டும்.


5. நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிப்பதோடு அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரை தலைமையாக கொண்டு தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.


6. வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் தங்களது இளமையை இழந்துவிட்டு தாயகம் திரும்பிய பின் மிகுந்த கஷ்டங்களை சந்திக்கிறார்கள், மேலும் வெளிநாடுகளில் பல்வேறு துயரங்களையும் சந்திக்கிறார்கள். எனவே நமது நாட்டிற்கு மிகுந்த அன்னிய செலவாணியை பெற்று தரும் அவர்களின் துயரை துடைக்கும் வகையில் அவர்களுக்கான நலவாரியம் ஒன்றை அமைக்குமாறும் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.


7. தாமிரபரணி நதியை பாதுகாக்க சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும்.


8. முஸ்லிம் மக்கள் பயன் பெரும் வகையில் வக்புவாரியத்தின் கீழ் மருத்துவ கல்லூரி ஒன்றை நிறுவப்படும் என்பதை அறிவித்து தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் .


9. வக்பு வாரியத்தின் வருமானத்தை பெருக்கும் வகையிலும் சிறப்பாக செயல்படவும், நலிவடைந்த பள்ளிவாசல்களை சீரமைக்கவும் வக்பு வாரியத்திற்கு சிறப்பு நிதி ரூ.3 கோடி வழங்கப்பட்டதை 10 கோடியாக அதிகரித்து அறிவிக்கப்பட வேண்டும்.


இப்படிக்கு.
கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி
மாநில தலைவர்
எஸ்.டி.பி.ஐ கட்சி- தமிழ்நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக