திங்கள், மார்ச் 18, 2013

வருங்கால இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வாழ்த்து மடல்..!

லைப்பு வியப்பாக இருந்திருக்கலாம் அல்லது வியப்பில்லாமலும் இருந்திருக்கலாம். எதற்கும் சொல்லி வைக்கலாமே என்று இந்திய பிரதமர் என்றே குறிப்பிட்டு எழுதி வைப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் என்பதால் அவ்வாறே குறிப்பிடுகிறேன்.


125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பிரதமராவது ஒன்றும் கடினமான காரியமல்ல. குதிரை பேரத்தில் தேர்ச்சிபெற்றிருந்தால் நரசிம்மராவ், சந்திரசேகர், வாஜ்பாய் போன்றோரெல்லாம் பிரதமர் ஆனதைப்போல் நீங்களும் இந்திய பிரதமராவது எளிதான ஒன்றுதான். ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகவே சொல்லப்பட்டு வந்தாலும் மன்மோகன் சிங்கை பிரதமராகத் தேர்ந்தெடுத்தவர்கள் மக்களல்லர் என்பதால் நீங்களும்கூட எப்படியாவது பிரதமராகிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை (காவி)தேசபக்தர்களிடம் இல்லாமலில்லை.

இந்தியாவின் கஜானாவைக் சட்டைப்பையில் வைத்திருக்கும் அம்பானிகள் போன்ற கோடானகோடீஸ்வரர்களின் ஆசி இருக்கும்வரை அமெரிக்கா உங்களுக்கு விஸா வழங்க மறுதலித்தாலும் கவலை வேண்டாம்; நீங்கள்தான் வருங்கால இந்திய பிரதமர்!

மதுவிலக்கு, தொழில் வளர்ச்சி, மின்வெட்டில்லா உபரிமின்சார இருப்பு ஆகிய தகுதிகளைக் கொண்டுள்ள குஜராத்தில் மூன்று முறையாக தொடர்ச்சியாக முதல்வராகியிருக்கும் உங்களைவிட நாட்டில் வேறுயாருக்கு இந்தியப் பிரதமராகும் தகுதி உள்ளது! எத்தனைமுறைகள் உச்சநீதிமன்றம் குட்டினாலும் அவற்றையெல்லாம் எச்சங்களாகத் துச்சமென மதித்து வீறுநடைபோடும் உங்களை எதிர்த்துநிற்க பாஜகவில் யாருக்கும் 'தில்' கிடையாது என்பதால் நீங்கள்தான் வருங்கால பிரதமர் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்த இனச்சுத்திகரிப்பு கலவரங்களில் சில ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதையே இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நினைவூட்டுவார்கள் கேடுகெட்ட மதசார்பற்றவர்கள். இலங்கையில் ராஜபக்சேயும், பாலஸ்தீனத்தில் ஏரியல் சரோனும், இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அமெரிக்காவும் செய்யாதவற்றையா நீங்கள் செய்து விட்டீர்கள்?

பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று சொல்லியே பாஜக இருபதாண்டுகளை வெற்றிகரமாக கடத்தி விட்டது. ராமர் கோவில் கட்டினாலும் அதில் சூத்திரர்கள் பூசைசெய்ய முடியாது என்பதாலும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அடிக்கடி உத்தரவிட்டுவதாலும் அடுத்த 50/100 ஆண்டுகளுக்கு அயோத்தியில் ஒன்றும் ஆகப்போவதில்லை. அதனால் ராமர் கோவில் கட்டுவோம் கட்டுவோம் என்று சொல்லிச் சொல்லியே அப்'பாவி இந்துக்களை கைக்குள் வைத்துக்கொண்டால்,  நீங்கள்தான் பிரதமர் என்பது உறுதி!

கோத்ரா ரயில் எரிப்பை முன்வைத்து, இன அழிப்பு நடத்தி சிறுபான்மை மக்களை மிரட்டியே, அவர்களை அச்சமின்றி வாக்களிக்க விடாமல் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருக்கும் ராஜ தந்திரியான நீங்கள் பிரதமராவதற்கும் மற்றொரு கோத்ரா கிடைக்காமலா போகும்? ஹைதராபாத்தில் குண்டுவைத்த ஹிந்த்துவ முஜாஹிதீன்கள், தேர்தல் நெருங்கும் நேரத்தில் உங்களுக்கு எவ்வகையிலேனும் உதவிசெய்து கைகொடுப்பர் என்று நம்புங்கள்.

பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி முழுவதும் ஊழல், ஊழல், ஊழல்தான். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு, இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தால், படுபாவிகள் 51% அந்நிய முதலீடுகளாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்போகிறார்களாம்! உருப்படுமா நாடு?

ராமர் பாலத்தை இடித்துவிட்டு ஏதோ சேதுக்கால்வாய் திட்டம் கொண்டு வருவார்களாம்! காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வரலாற்று நினைவுச்சின்னங்களை இடிப்பதுதான் அவர்களுக்குப் பொழுதுபோக்கு போலும்! தமிழக மீனவர்களைத் தினம் ஒருவர் வீதம் சராசரியாக சுட்டுக்கொல்லும் இலங்கை ராணுவத்தைக் கண்டிக்க துப்பில்லாத காங்கிரஸ் அரசாங்கமா பாகிஸ்தானைக் கண்டிக்கப்போகிறது?

காங்கிரஸ்மீது தமிழர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால் இந்த வாய்ப்பைப்பயன்படுத்தி ராஜபக்சேவைச் சும்மாவேனும் கண்டித்து வைத்தால் நல்லது. காங்கிரஸைக் கைகழுவ வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கும் நல்லதென்பதால் உடனடியாக ராஜபக்சேவைக் கண்டித்து ஒரு அறிக்கை விடுங்கள்.

யூனியன் கார்பைடு தலைவர் வாரன் ஆண்டர்சனாகட்டும், கேரள மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இத்தாலிய கப்பல் மாலுமிகளாகட்டும் என்னவொரு மெத்தனம் பாருங்கள்! அரசு மரியாதையுடன் அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைத்து அழகுபார்க்கிறது இந்த காங்கிரஸ். கொஞ்சம் அசந்திருந்தால் அஜ்மல் கசாபையும் பாகிஸ்தானில் ஓட்டுபோடுவதற்கு அனுப்பி வைத்திருப்பார்கள்.

ஆகவே, உங்களை வருங்கால இந்திய பிரதமர் என்று சொல்வதில் வியப்பில்லைதானே. வாழ்த்துகள் மோடி சார்!

நன்றி : - எழில் பிரகாசம்                                                                                     1

Source : inneram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக