சகாயத்தின் மரணம் தொடர்பாக சந்தேகம் நிலவிய வேளையிலும் முன்னரே தீர்மானித்தபடி காலை 11 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் கழுத்தளவு நீரில் மூழ்கும் போராட்டத்தை துவக்கினர். இப்போராட்டத்தில் பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். மதியம் 1 மணிக்கு சகாயம் மரணமடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவலை மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்டனர். உடனே, போராட்டக்குழு தலைவர்கள் மக்கள் அனைவரும், கடலில் இருந்து வெளியேறி லூர்து மாதா கோயிலில் உள்ள போராட்ட பந்தலுக்கு வருமாறு கட்டளையிட்டனர். சர்ச்சில் மரண அறிவிப்பு மணி முழக்கப்பட்டது. பின்னர் போராட்ட பந்தலில் அனுதாப கூட்டம் பாதிரியார் தலைமையில் துவங்கியது.
இதனிடையே, அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் தொலைபேசி மூலம் மக்களிடம் பேசினார். எல்லோரும் மரணித்தாலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அவர் அறிவித்தார். கேரளாவில் இருந்து சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூடங்குளம் வருகை தருவதை வரவேற்பதாக உதயகுமார் தெரிவித்தார்.
மனைவியும்,3 பெண்குழந்தைகளும், ஒரு மகனும் அடங்கிய சகாயத்தின் குடும்பத்தை போராட்டக்குழுவும், ஊர் மக்களும் பாதுகாப்போம் என்று போராட்டக்குழு தலைவர்கள் அறிவித்தனர். சகாயத்தின் மரணத்திற்கு காரணம் அரசு தரப்பில் ஏற்பட்ட தாக்குதலே என்று குற்றம் சாட்டி போராட்டக் குழு அதிகாரிகளிடம் புகார் அளித்தது.
இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் இடிந்த கரையில் ஆறு சிறுவர்களை போலீஸ் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுத்தொடர்பாக எவ்வித விளக்கத்தையும் அதிகாரிகள் அளிக்கவில்லை. இதனிடையே விழிஞ்ஞம் முதல் பாண்டிச்சேரி வரையிலான 13 மீனவ கிராமங்களில் வெள்ளிக்கிழமையும் மீனவர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக