புதன், ஜனவரி 22, 2014

அரவிந்த் கெஜ்ரிவால் “பைத்தியக்கார முதல்-முந்திரி” உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தாக்கு


புதுடெல்லி,
டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக  எழுந்த புகார் தொடர்பான பிரச்சனையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பிரச்சினையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர்  டெல்லில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பெயரை குறிப்பிடாமல் மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
மராட்டிய மாநிலம் ஹிங்கோலியில் பேசிய சுஷில் குமார் ஷிண்டே “நான் கேர்வாடியில் (போலீசாக) இருந்த போது, எனது திருமணத்திற்கு பின்னர் அங்கு கலவரம் நடந்தை அடுத்து எனது விடுப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது பைத்தியக்கார முதல் மந்திரியின் தர்ணாவால் நான் போலீசாரின் விடுமுறையை ரத்து செய்துள்ளேன்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை தெரிவிக்கவில்லை.
4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா நடத்திய போது. துணை நிலை கவர்னர் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டார். அப்போது பகர்கஞ்ச் மற்றும் மாளவியநகர் காவல் நிலைய 2 அதிகாரிகளை விடுப்பில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து இரண்டு நாள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக