செவ்வாய், மே 10, 2011

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை!!!


புதுடெல்லி: May 10, பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடம் கொடுக்கவேண்டும்.

இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகரா என்ற அமைப்பிடம் கொடுக்க வேண்டும்.

இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம்.

என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பிற்குத் தான் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், நிலத்தைப் பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை.

ஆனால், யாருமே கேட்காத நிவாரணத்தைக் கொடுத்துள்ளது அலகாபாத் உயர் நீதிமன்றம். எவரும் கோராத வகையில், நிலத்தைப் பிரிக்குமாறு தீர்ப்பளித்திருப்பது வினோதமாகவும் உள்ளது, விந்தையாகவும் உள்ளது.


இது மிகவும் புதுமையான, புதிரான தீர்ப்பு. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே அயோத்தியில்  தொடர வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 60 ஆண்டுகளாக தொடரும் அயோத்தி பாப்ரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.


அலகபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்து தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் அமைப்புகள், வரலாற்றாய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

வரலாற்று உண்மைகளையும், சொத்துரிமை ஆவணங்களையும் பரிசோதிக்காமல் பெரும்பான்மை நம்பிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கீழ் நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இத்தடை உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கீழ் இயங்கும் பாப்ரி மஸ்ஜித் கமிட்டியின் கன்வீனர் டாக்டர். எஸ். க்யூ. ஆர். இல்லியாஸ் தெரிவித்துள்ளார்.

மஸ்ஜிதின் மீது தங்களுடைய உரிமையை நிரூபிக்கும் ஏராளமான ஆவணங்களை சமர்பித்தோம். அவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே
தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு விந்தையானதும், வினோதமானதுமாகும் என உச்ச நீதிமன்றத்தின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது.

என அனுபம் கேர், டாக்டர்.கெ.எம்.ஸ்ரீமதி, மகேஷ் பட், டாக்டர்.கே.என். பணிக்கர், பேராசிரியர் ரூபரேக வர்மா, ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மதசார்பற்ற சக்திகளுக்கு ஆசுவாசத்தை தரும் உத்தரவு, நீதிதுறை மேல் நம்பிக்கை ஏற்படுத்தும் உத்தரவு, என மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உச்சநீதிமன்ற தீர்ப்பைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக