வெள்ளி, மே 27, 2011

கலைஞர் தொலைகாட்சி சேனல் முடக்கப்படுமா?

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் கலைஞர் தொலைகாட்சிக்கு தொடர்பு இருப்பதால் அந்த தொலைகாட்சி சேனல் முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் மத்திய அமலாக்கத் துறையினர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டது. அலைவரிசை ஊழல் குறித்து சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு வருமான வரித்துறை ஆகியவற்றை சேர்ந்த உயர் அதிகாரிகள் புலனாய்வு நடத்தி வருகிறார்கள்.
இந்த புலனாய்வை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது. அலைவரிசை ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆ. ராசா, கனிமொழி, கலைஞர் தொலைகாட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாருக்கும் ஜாமீன் அளிக்கப்படவில்லை.
அலைவரிசை ஒதுக்கீடு காரணமாக பல நிறுவனங்கள் பலனடைந்துள்ளன. குறிப்பாக யுனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சுருட்டி உள்ளன. யுனிடெக் நிறுவனத்துக்கு 22 கோட்டங்களில் இயங்க அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக நிர்ணயம் செய்யப்பட்ட தொகை ரூ.1,688 கோடியாகும். உடனே 67 சதவீத பங்குகளை டெலிநார் நிறுவனத்துக்கு யுனிடெக் விற்பனை செய்து விட்டது. இதற்காக டெலிநார் நிறுவனம் கொடுத்த தொகை ரூ. 6,100 கோடியாகும்.
அந்நிய செலாவணி நிர்வாக சட்டம், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டம் ஆகியவை மீறப்பட்டுள்ளன என்பது புலனாய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள், அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்திற்கு புறம்பாக முதலீடுகளை செய்துள்ளது. கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தில் 5 வது மற்றும் 8 வது பிரிவுகளின் படி குற்றச்சாட்டை பதிவு செய்து விட்டாலே அசையும் சொத்து மற்றும் அசையா சொத்தை முடக்கலாம். அமலாக்க துறை இத்தகைய நடவடிக்கைகளை வேறு வழக்குகளில் ஏற்கனவே எடுத்துள்ளது.
ஆந்திராவை உலுக்கிய சத்யம் நிறுவன வழக்கில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதே போல் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா முறைகேடான வழிமுறைகளை பின்பற்றி கோடிக்கணக்கில் சொத்து குவித்தார் என்று அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவரது அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாத சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக யுனிடெக் நிறுவனத்தின் ரூ. 2,340 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தபடியாக ஸ்வான் நிறுவனத்தின் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் பார்வை குவிந்துள்ளது. ஸ்வான் நிறுவனம் தான் எட்டிசலாட், டி.பி. நிறுவனமாக மாறியது. டி.பி. ரியாலிட்டியில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சாகித் உஸ்மான் பல்வா, தற்போது திஹார் சிறையில் உள்ளார்.
ஸ்வான் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 2,800 கோடி சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டி.பி. ரியாலிட்டிஸ் நிறுவனத்திடம் இருந்து தான் கலைஞர் தொலைகாட்சிக்கு சுமார் 200 கோடி வந்தது. டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து குசேகான் புரூட்ஸ் அன்டு வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்கு பணம் கைமாறியது. அதற்கு பிறகு அத்தொகை சினியுக் நிறுவனத்துக்கு பரிவர்த்தனையானது. இறுதியாக கலைஞர் தொலைகாட்சிக்கு பணம் வந்து சேர்ந்தது. இது கடன் தொகை தான். வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி கொடுத்து விட்டோம் என்று கலைஞர் தொலைகாட்சி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் கூறியதை சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் ஏற்கவில்லை.
ஸ்வான் நிறுவனத்திற்கு குறைந்த கட்டணத்தில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட தொகை தான் இந்த 200 கோடி ரூபாய் என்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூறி வருகின்றனர். பண மாற்றத்துக்கு மொரீசியஸ் முக்கிய கேந்திரமாக இருந்து வந்துள்ளது. இந்தியாவுக்கு வந்த நேரடி அன்னிய முதலீட்டில் பெரும் பங்கு மொரீசியஸ் வழியாகவே வந்துள்ளது. 2000 ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்தியாவுக்கு வந்த நேரடி அன்னிய முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ. 6,50,000 கோடி ஆகும். இதில் 42 சதவீத நேரடி அன்னிய முதலீடு மொரீசியஸ் வாயிலாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொரீசியஸ் தலைநகரான போர்ட்லூயிஸில் உள்ள ஒரு முகவரியில் 12 நிறுவனங்கள் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த மோசடி குறித்தும் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. மொரீசியஸ் அரசும் இது குறித்து ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. ஸ்வான் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டால் கலைஞர் தொலைகாட்சியும் முடக்கப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சொத்துக்களும் தொடர்ந்து முடக்கப்படும் என தெரிகிறது. மேலும் மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.
new india news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக