வாஷிங்டன்: பிரீமியம் எச்-1பி விசா சேவையை ஏப்ரல் 3ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க குடியேற்றத்துறை அதிரடியாக முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவில் புதிதாக பதவி ஏற்றுள்ள அதிபர் டிரம்ப தலைமையிலான நிர்வாகம், அமெரிக்காவில் வெளிநாட்டினர் எண்ணிக்கையை குறைப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த கெடுபிடியை அடுத்து, பிரீமியம் எச்-1பி விசா சேவையை ஏப்ரல் 3ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று குடியேற்றத்துறை முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவில் வேலை செய்ய எச்-1பி விசா மூலம் சென்றால், தான் பணி செய்யும் கம்பெனியை கைகழுவிவிட்டு வேறு வேலையில் சேரலாம். அப்படி ஒரு வசதி அந்த விசாவில் உண்டு.
இந்தியர்கள் பலரும் எச்1பி விசாவில் அமெரிக்கா செல்ல ஆசைப்படுவர். அங்கு சென்றபின், வேலை மாறி புது கம்பெனி மூலம் புதிதாக எச்1பி விசா பெறுவர். அதற்கு அதிக கட்டணம் கட்டி பிரீமியம் எச்1பி விசா பெற முடியும். இப்படி பலரும் செய்வதால், கடந்த சில ஆண்டுகளாக பிரீமியம் எச்-1பி விசா விண்ணப்பங்கள் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் மற்ற எச்-1பி விண்ணப்பங்கள் நீண்ட காலமாக பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. இந்நிலையில்தான் பிரீமியம் விசா சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தற்காலிக நிறுத்தம் 6 மாதம் நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விசா முடிந்து விட்டால் அமெரிக்க வேலை பறிபோகும்
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் பலரும் எச்1பி விசா வைத்திருப்பவர்கள். இவர்களில் விசா காலம் முடிவடைந்தால் அவர்கள் இந்தியா வந்து மீண்டும் விசா அனுமதி பெற்று அமெரிக்க நிறுவன வேலையை தொடரலாம். டிரம்ப் போட்ட கிடுக்கிப்பிடியால் இவர்களுக்கு தான் சிக்கல். இவர்கள் இந்தியா வந்தால் உடனே விசா நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை; சில மாதம் கழித்து தான் கிடைக்கலாம். அதற்குள் அவர்கள் அமெரிக்க வேலை பறிபோகும் ஆபத்து உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக