ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது!

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் விரிசல் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிக்கி்ம் மாநிலம் முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மாநிலமே இருளில் மூழ்கியுள்ளது. உயிரிழப்பு குறித்தோ, பிற சேதம் குறித்தோ விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இன்று மாலை 6.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பெரும் பீதியுடன் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

தரைக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட, கிழக்கு இந்தியாவில் நில அதிர்வுகள்

இதேபோல வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர்.

டெல்லியின் பல பகுதிகளில் மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்தனர். டெல்லியின் தென் பகுதியில்தான் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்ட்டது. சமீபத்தில்தான் டெல்லியை நிலநடுக்கம் தாக்கியது. அப்போது 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது என்பது நினைவிருக்கலாம்.

பீகார் மாநிலம் பாட்னா, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, உ.பி. மாநிலம் லக்னோ, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வடக்கே டெல்லி முதல் கிழக்கே கிழக்கு நேபாளம் வரை பல பகுதிகளை நிலநடுக்கம் ஆட்டிப் படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

சிக்கிமை மையமாகக் கொண்ட இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாநிலங்களில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக