திங்கள், செப்டம்பர் 12, 2011

பரமக்குடி துப்பாக்கிசூடு பலி 6 ஆக உயர்வு! பேருந்துகளுக்கு தீவைப்பு

 பரமக்குடி: மதுரை மற்றும் பரமக்குடியில் நடந்த கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இவர்களது உடல்களை இன்று அடக்கம் செய்யவிருப்பதால் மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு 144 தடையை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் அமைக்கப்படுவதாக சட்டசபையில் அறிவித்தார். இதற்கிடையில் இன்று மதியம் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் சாத்தூர் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துக்கு சிலர் தீ வைத்தனர் இதில் பேருந்து முழுவதும் தீயில் கருகியது.
ராமாநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 25 அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் மற்றும் சிவகங்கை சென்ற 2 அரசுப் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில் அரசுப் பேருந்துகள் செல்லவில்லை ராமேஸ்வரம் செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக